நாளை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்?
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுக்கும் மசோதா 12 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமாகும் நிலை உருவாகியுள்ளது.
பெரும் அமளிக்கு மத்தியில் தொடங்கி கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளன.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் உயர்கல்வியில் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை நீக்குதல் ஆகிய பிரச்னைகள் லோக்சபாவில் இன்று விவாதிக்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் பிரச்னையால் நாடாளுமன்ற இரு அவைகளும் எந்த விவாதமும் இன்றி ஒத்திவைக்கப்பட்டன. நாளை மீண்டும் அவை கூடுகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த சீர்திருத்த திருமண விழாவில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, நான் கேள்விப்படுகிறேன். வெகு விரைவில், ஓரிரு நாளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வரவிருக்கிறது என்ற நற்செய்தியைக் கேள்விப்படுகிறேன்.
பெரியாருடைய கொள்கைகளை, தமிழகத்திலே மாத்திரமல்ல- வட புலத்திலே இருக்கின்ற மாநிலங்களிலும் இன்றைக்கு படிக்க விரும்புகிறார்கள். உணர விரும்புகின்றார்கள். பின்பற்ற விரும்புகிறார்கள். அதை ஊக்கப்படுத்த வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
இங்கே கவிஞர் கனிமொழி பேசும்போது பெண்கள் இன்னும் முன்னேற வேண்டு மென்ற கருத்தை பெண்களுக்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை எடுத்துச் சொன்னார். ஒருவேளை அவர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருக்கின்ற காரணத்தால், முன்கூட்டியே ரகசியத்தை தெரிந்து சொன்னாரோ என்னவோ, எனக்குப் புரியவில்லை என்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்பதை சூசகமாகத் தெரிவித்திருந்தார் கருணாநிதி.
கேபினட் ஆலோசனை:
இந்த மசோதாவுக்கு மத்திய அரசில் அங்கம் வகித்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவர் இந்த மசோதாவிலும் உள் ஒதுக்கீடு கோரி வருகிறார். பிற்பட்ட, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது லாலுவின் நிலை.
இந் நிலையில் லாலுவை காங்கிரஸ் ஒரு வழியாக சமாதானப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாளையே இந்த மசோதா நாடாளுமன்றத்தி்ல் தாக்கலாகலாம் என டெல்லி வட்டாரங்கள் பரபரக்கின்றன.