சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் உதயமானது
சென்னை மாநகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகள் முன்பு சென்னை காவல்துறை எல்லைக்குள் இடம் பெற்றிருக்கவில்லை. அனைத்தும் இணைந்து செங்கை கிழக்கு காவல் மாவட்டத்தின் கீழ் இருந்தன.
கடந்த அதிமுக ஆட்சியில், செங்கை கிழக்கு காவல் மாவட்டம், மாநக காவல்துறையின் கீழ் இணைக்கப்பட்டன. இதையடுத்து பெருநகர காவல்துறையாக சென்னை காவல்துறை வியாபித்தது.
முன்பை விட பல மடங்கு எல்லை பெரிதாகி விட்டதால், நிர்வாக ரீதியாக சென்னை காவல்துறை பல சிக்கல்களை சந்தித்தது. சென்னை மாநகர காவல்துறையின் தலைமையகம் எழும்பூரில் உள்ளது. இதனால், தாம்பரத்தைத் தாண்டியோ அல்லது ஆவடியைத் தாண்டியோ, கிழக்குக் கடற்கரைச் சாலையிலோ ஏதாவது ஒரு பெரிய சம்பவம் நடந்தால் உயர் அதிகாரிகள் அங்கு விரைவது பெரும் சிக்கலாக இருந்தது.
இதையடுத்து புறநகர்ப் பகுதிகளைத் தனியாகப் பிரித்து புதிய ஆணையரகம் அமைக்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அரசும் அதை ஏற்றது. இதையடுத்து சென்னைப் புறநகர்களை தனியாகப் பிரித்து புதிய ஆணையரகம் அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
அதன்படி தற்போது புதிய சென்னைப் புறநகர் காவல் ஆணையரகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் ஆணையராக எஸ்.ஆர்.ஜாங்கிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய புறநகர் காவல் ஆணையரகத்தின் எல்லை 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. ஆனால் மாநகர காவல் எல்லையின் அளவு வெறும் 174 சதுர கிலோமீட்டர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகரை விட புறநகர் காவல் ஆணையரகத்தின் எல்லை மிகப் பெரியது.
புறநகர் காவல் ஆணையரக எல்லைக்குள் மொத்தம் 38 காவல் நிலையங்கள் உள்ளன. அம்பத்தூர், மாதவரம், பரங்கிமலை ஆகிய 3 காவல் மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள துணை ஆணையர்களோடு கூடுதலாக 6 துணை ஆணையர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இவர்களைத் தவிர 2 கூடுதல் துணை ஆணையர்களும் பொறுப்பேற்கவுள்ளனர்.
44 உதவி ஆணையர்கள், 146 இன்ஸ்பெக்டர்கள், 375 சப் இன்ஸ்பெக்டர்கள், 5 ஆயிரம் போலீஸார் உள்பட மொத்தம் 6000 போலீஸார் இந்த ஆணையரகத்தின் கீழ் இடம் பெறுவார்கள்.
பரங்கிமலையில் புதிய புறநகர் காவல் ஆணையகத்தின் தலைமை அலுவலகம் அமையும. தற்போது இங்கு தென் சென்னை இணை ஆணையரின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் தற்போது சாஸ்திரி நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 7வது காவல் ஆணையரகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல் ஆணையரகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.