பெட்ரோல்-டீசலை சிக்கனமாக பயன்படுத்த பிரதமர் கோரிக்கை
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை விளக்கி தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நேற்று இரவு உரை நிகழ்த்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.
அப்போது அவர் கூறியதாவது: உயர்ந்து வரும் இறக்குமதி செலவுகளுக்கு மத்தியில், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியாது. நமது எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்தில் சுருண்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்படியே நிலைமை நீடித்தால் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு, அவர்களிடம் பணம் இருக்காது.
இன்று அறிவித்துள்ள விலை உயர்வு நிச்சயம் கசப்பானதுதான். இது மக்களுக்குப் பிடிக்காதுதான். ஓரளவே விலை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் இது நிச்சயம் கூடுதலான உயர்வுதான். இதை அரசும் உணர்ந்திருக்கிறது.
வரிகளைக் குறைத்திருப்பதன் மூலம் ரூ. 22,690 கோடி வருவாய் கிடைக்கும். அதேசமயம், மாநில அரசுகளும் தங்களது விற்பனை வரியைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் பாதிப்பையும், விலை உயர்வையும் சரிக்கட்ட முடியும்.
மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும், நுகர்வோரும் இந்தப் பளுவின் ஒரு பகுதியை சுமக்கின்றனர். எனவே மாநில அரசுகளும் தங்களது விற்பனை வரியை குறைத்து, சுமையைப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும்.
எரிபொருளை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதேசமயம், அணு சக்தி உள்ளிட்ட மாற்று எரிசக்தியை கண்டறியும், அதிகஅளவில் பயன்படுத்தவும் முயல வேண்டும்.
நாட்டு மக்கள் பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். தண்ணீரையும் கூட நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
தற்போதைய தலைமுறையின் நலனைப் பாதுகாக்கும் கடமை மட்டும் அரசுக்கு இல்லை. எதிர்காலச் சந்ததியினரின் நலனையும், நமது பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள் ஆகியோரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களது நலனையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார் பிரதமர்.