காய்கறி விலை தாறுமாறாக உயர்வு - மக்கள் அவதி!
நாடு முழுவதும் நடந்து வரும் லாரி ஸ்டிரைக்கால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ இல்லையோ, பொதுமக்கள்தான் மகா மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறிப்பாக காய்கறிகள், சமையல் எண்ணை, பருப்பு உள்ளிட்டவை கடும் விலை உயர்வை சந்தித்துள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் உள்ள விலைக்கும், சில்லரை விற்பனைக் கடைகளில் உள்ள விலைக்கும் இடையே மடுவுக்கும் - மலைக்குமான வித்தியாசம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வழக்கமான விலையை விட அதிகபட்சம் 5 ரூபாய் வரைதான் விலை உயர்ந்துள்ளது. ஆனால் நகரிலும், புறநகரப் பகுதிகளிலும் உள்ள சில்லரை விற்பனைக் கடைகளில் ரூ.10 முதல் 20 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்கின்றனர்.
தக்காளி கோயம்பேட்டில் கிலோ 7 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆனால் பிற கடைகளிலோ 20 ரூபாய் என்கிறார்கள். உருளைக்கிழங்கு கிலோ 9 ரூபாய்க்கு கோயம்பேட்டில் விற்கிறது. பிற கடைகளில் 16 ரூபாயாக விற்கிறார்கள். அதேபோல பெரிய வெங்காயம் கோயம்பேட்டில் கிலோ ரூ. 9க்கு விற்கப்படுகிறது. கடைகளில் 12 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
வெண்டைக்காய் விலை கோயம்பேட்டில் கிலோ ரூ. 12தான். ஆனால் கடைகளில் 25 ரூபாய். பீட்ரூட் வெளிக்கடைகளில் கிலோ 16க்கு விற்கப்படுகிறது. கோயம்பேட்டில் 8 ரூபாய்தான்.
முள்ளங்கி, முட்ைட கோஸ், கேரட், பீன்ஸ், கத்திரிக்காய், அவரை, முருங்கை, புடலங்காய் என அனைத்து காய்கறிகளும் கோயம்பேட்டில் சொற்ப விலை உயர்வையே கண்டுள்ள நிலையில், பிற கடைகளில் தாறுமாறாக வைத்து விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
ரிலையன்ஸ் பரவாயில்லை:
அதேசமயம், ரிலையன்ஸ் பிரெஷ் கடைகளில் விலை இந்த அளவுக்கு தாறுமாறாக இல்லை. வெளிக்கடைகளில் விற்கப்படும் விலையை விட குறைவாகவே இங்கு விற்பனை ஆவதால், மக்கள் அங்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னை நகரில் பெரும்பாலும் மளிகைக் கடைகளின் ஒரு ஓரத்தில் காய்கறிக் கடைகள் வைத்திருக்கிறார்கள். இந்தக் கடைகளில்தான் விலை இப்படி தாறுமாறாக உள்ளது. இப்படிப்பட்ட கடைகளை மட்டுமே நம்பியுள்ள மக்கள்தான் பெரும் பொருள் இழப்பை சந்திக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கட்டுப்படுத்த அரசும், வணிகர் சங்கங்களும் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேன்கள் நிறுத்தம் - மாணவர்கள் பாதிப்பு:
லாரிகள் ஸ்டிரைக்கில் வேன்களும் பங்கெடுத்துள்ளதால் சென்னையில் பள்ளிகளுக்கு காண்டிராக்ட் முறையில் ஓடிவரும் வேன்கள் வேலைக்குப் போகவில்லை. இதனால் பல பள்ளிகளில் மாணவ, மாணவியரை அழைத்து வர வேன்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பெரும்பாலான பள்ளிகளில் மாணவ, மாணவியர்வருகை மிகக் குறைவாக இருந்தது. தொலை தூரத்திலிருந்து வரும் மாணவ, மாணவியர் விடுமுறை எடுத்து விட்டனர்.
கட்டுமானத் தொழிலிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மணல், ஜல்லி, இரும்பு உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்ல லாரிகள் இல்லாததால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருப்போரும், வீடுகள் கட்டி வருவோரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழக அரசுக்கு தினசரி ரூ. 150 கோடியும், லாரி உரிமையாளர்ளுக்கு ரூ. 15 கோடியும் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரியிலேயே சமையல் - தூங்கல்:
ஸ்டிரைக்குக்கு முன்பே தமிழகம் வந்து விட்ட வெளி மாநிலலாரிகள் பல ஆங்காங்கே அனுமார் வால் போல நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.
வெளி மாநில லாரி டிரைவர்கள், கிளீனர்கள், லாரியிலேயே சமையல் செய்து சாப்பிட்டு தூங்கிப் பொழுதைக் கழித்து வருகின்றனர். லாரிகளில் சரக்குகள் இருப்பதால் பலரால் லாரியை விட்டு நகர முடியாத இக்கட்டான நிலை. இதனால் லாரிக்கு பக்கத்திலேயே இருக்க வேண்டிய நிலை.
சீட்டு விளையாடுவது, பாட்டு கேட்பது, பாட்டு பாடுவது என பொழுதைக் கழித்து வருகின்றனர்.