முதலைகளுக்கும் கு.க.-தமிழக பல்கலை சாதனை!
சென்னை : உலகிலேயே முதல் முறையாக முதலைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து சாதனை படைத்துள்ளனர் தமிழக கால்நடைப் பல்கலைக் கழக மருத்துவர்கள்.
தாம்பரத்துக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் சிங்கங்கள் மற்றும் முதலைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் நடந்தது.
பாரம்பரியம் தெரியாத சிங்கங்கள் அதிகம் உருவாவதைத் தடுக்கவும், பெருகிக் கொண்டு போகும் முதலைகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த கருத்தடை ஆப்ரேஷன் நடந்துள்ளதாக தனுவாஸ் எனப்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் தங்கராஜ் தெரிவித்தார்.
இந்த சிகிச்சைக் குறித்து டாக்டர் தங்கராஜ் கூறியதாவது:
முதலைகள் வருடத்திற்கு இரு முறை 25 முதல் 30 முட்டைகள் வரை இடும். ஆண் முதலையின் ஆண்குறியின் மேல் நீளவாக்கில் ஓடை போன்ற பகுதி காணப்படும். இனச்சேர்க்கையின்போது இந்த ஓடை வழியாக விந்து கசிந்து பெண் உறுப்பில் படிய வைக்கும். பொதுவாக வெளித்தோற்றத்தை வைத்து ஆண், பெண் முதலைகளை இனம் பிரித்துப் பார்ப்பது கடினம்.
சைலசின்-கீட்டமின் என்ற மயக்க மருந்தை ஊசி மூலம் சதை வழியாக செலுத்தி, முதலை மயங்கிய நிலைக்கு வந்ததும், அதன் ஆண்குறியை வெளியே எடுத்து ஓடை போன்ற பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பின் தையலிட்டு மூடுகிறார்கள். இதனால் ஆண் முதலைகள் பெண் முதலைகளோடு சேரலாம், ஆனால் இனப்பெருக்கம் நடக்காது.
அதேநேரம் இந்த சிகிச்சையால் முதலைகளில் இயல்பான நடவடிக்கைகள் பாதிக்கப்படாது.
இதே போல சர்க்கஸ் மற்றும் தனியார் வசம் இருந்த பாரம்பரியம் தெரியாத 18 ஆண் சிங்கங்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சராசரியாக மூன்று முதல் ஐந்து மணி நேரம் நடந்துள்ளது, என்றார் தங்கராஜ்.
முதலைகளுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை. அந்தப் பெருமை கால்நடைப் பல்கலைக் கழக அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார், பேராசிரியர் ஜஸ்டின் வில்லியம், இணைப் பேராசிரியர் தனஞ்செயராவ் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. இவர்கள்தான் இந்த சிகிச்சையைச் மருத்துவ நிபுணர்கள்.