பறவைகளுக்காக பட்டாசு தியாகம்!
பிற உயிர்களிடத்தில் அன்பு கொள், என்ற வள்ளலாரின் வாழ்க்கை முழுக்க முழுக்க பின்பற்றி வாழும் ஒரு கிராமமும் இன்றைக்கு இருக்கிறது, எங்கே என்கீறிர்களா.... தமிழகத்தின் தென் கடைக்கோடியில் திருநெல்வேலி அருகேயுள்ள கூந்தன்குளம்தான் அந்த கிராமம்.
நாங்குநேரிக்கு அருகேயுள்ள கூந்தன்குளம் கிராமத்தில் ஜனவரி முதல் ஏப்ரல், மே வரை ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மியன்மார் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான பறவையினங்கள் பலநூறு மைல்கள் தாண்டி இங்கே வருகின்றன.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி, பஞ்சம் போன்றவற்றால் உயிர் வாழ திசை மாறி இடம் பெயர்ந்து மூன்றடைப்பு என்ற பகுதிக்கு வந்துள்ளன.
மூன்றடைப்பில் தங்கிய பறவைகள் பக்கத்து கிராமங்களிலுள்ள நீர் நிலைகளான குளம், குட்டை மட்டுமின்றி ஆறுகள், நீர்த்தேங்களில் தினமும் பகல் பொழுதில் இறை தேடி சென்று விட்டு மாலை பொழுதில் அங்குள்ள கருவேல மரங்களில் கூட்டம் கூட்டமாக தங்கி வந்தன. பின்னர் சில 'நல்லவர்கள்' இந்த அரியவகை பறவையினங்களை வேட்டையாடி சாப்பிட தொடங்கவே அவை இடம் மாறத் தொடங்கின.
இந்த பறவைகள் மூன்றடைப்பு மெயின் ரோட்டை ஓட்டியுள்ள குளங்களில் தான் முதன் முதலாய் வநது தங்கின. அதன் பின்பு ஆண்டுகள் நகர நகர சில நூறு பறவைகள் ஆயிரம் ஆயிரமாக மாறி பல லட்சம் பறவைகள் தங்கும் சரணாலயமாக இப்பகுதி மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கும் இரண்டாவது வேடத்தாங்கலாக கூந்தன்குளம் மாறவே, இங்கு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வரத் தொடங்கினர். ஆனால் சுற்றுலா பயணிகளை வரவேற்க போதுமான சாலை வசதி, கழி்ப்பிட வசதி, குடிநீர் வசதி, வியூ பாயிண்ட், போன்றவை இல்லாமல் இருந்தாதல் இந்த பகுதிக்கு வருவதை ஏராளமானோர் தவிர்த்தனர்.
விழித்துக் கொண்ட அரசு நிர்வாகம் சுற்றுலாத்துறை மூலம் இப்பகுதியினை புணரமைக்க முடிவெடுத்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே 50 லட்சம் செலவில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திட அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாணிக்கராஜ் எம்எல்ஏ முயற்சித்து தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 12 லட்சமும், மாவட்ட ஆட்சி தலைவர் வளர்ச்சி நிதியிலிருந்து 13 லட்சமும், தமிழக சுற்றுலா துறை மூலம் 25 லட்சமும் நிதி ஓதுக்கிடு பெற்று பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்பின்புதான் கூந்தன்குளம் ஊராட்சி பகுதிகள் தமிழக சுற்றுலா துறை வரைபடத்தில் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றடைப்பில் இரூந்து பறவைகள் கூந்தன்குளத்திற்கு இடம் பெயர்வதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள்தான் காரணம். ஏன் எனில் அதிக நீர் நிலைகள் மூன்றடைப்பில் உள்ளது. இங்குள்ள உடை மரங்களில் பறவைகள் நிம்மதியாக தங்கி இந்த ஊரின் வளர்ச்சிக்கும், பொருளாதார உயர்வுக்கும் வழி வகுத்தன. அதனை சில நபர்கள் வெடி வைத்து கொன்று உணவாக சாப்பிட தொடங்கினர். இதனாலேயே இப்பறவைகள் இடம் பெயர்ந்து கூந்தன்குளம் கிராமத்தில் பறந்து விரிந்துள்ள குட்டைகளில் இருக்கும் கருவேலி மரங்களில் தங்கத் தொடங்கியதாக அப்பகுதி ஊராட்சி மன்ற பிரமுகர் சிதம்பரம் கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெளிநாட்டு பறவைகள் கூந்தன்குளத்திற்கு இடம் பெயர்ந்ததை இக்கிராம மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஒன்றுகூடி ஒரு கட்டுபாட்டினையும் உருவாக்கினர்.
மூன்றடைப்பு பகுதியில் இருந்து நம் பகுதிக்கு வந்துள்ள இந்த பறவையினங்களுக்காக பண்டிகை காலங்களில் வெடி, வேட்டு போன்றவைகளை வெடித்து அதிர்வுகளை ஏற்படுத்த கூடாது என்பதுதான். அந்த கட்டுபாட்டின் படி இன்றுவரை பறவைகளுக்காக இக்கிராம மக்கள் பட்டாசுகளை கிராமங்களுக்குள்ளே அனுமதிப்பதில்லை.
அதிர்வுகளால் இப்பறவையினங்கள் இடம் பெயர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த பகுதி மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
வீட்டுக்குள்ளேயே உள்ள உறவுகளிடம் விட்டு கொடுத்து வாழ்பவர்கள் அருகி விட்டநிலையில், உறவுகளுடன் ஒட்டின்றி வாழும் பலருக்கு மத்தியில், பறவையினங்களுக்காக தங்களது மகிழ்ச்சியை ஒரங்கட்டி வைத்து வாழும் மனிதாபிமானமிக்க கூந்தன்குளம் சுற்று வட்டார கிராம மக்களை நினைத்தால் மனசு சிலிர்க்கிறது.