தேஷ்முக் ராஜினாமா: துணை முதல்வரும் விலகல்-முதல்வராகிறார் ஷிண்டே
இதையடுத்து மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீண்டும் மகாராஷ்டிர முதல்வராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் விலகி விட்டார். அடுத்து மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வரும், அம்மாநில உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று காலை பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் தேஷ்முக்கை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆர்.ஆர்.பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டெல்லியில் நடந்த இக்கட்சிக் கூட்டத்தில் பாட்டீலை ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து கட்சித் தலைவர் சரத்பவார், பாட்டீலை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்தே ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார் பாட்டீல்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் மக்களை மீட்கும் முயற்சியில் உயிரைப் பணயம் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், இந்த தாக்குதல் சாதாரண சம்பவம்தான், பெரிய விஷயமல்ல என்று முட்டாள்தனமாக உளறினார் என்பது நினைவிருக்கலாம்.
தேஷ்முக்கும் விலகினார்:
இதைத் தொடர்ந்து முதல்வர் தேஷ்முக்கும் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேஷ்முக்கும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு அவர் அனுப்பி விட்டார். இன்னும் 48 மணி நேரத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
முதல்வராகிறார் ஷிண்டே:
தேஷ்முக்குக்குப் பதில் மத்திய அமைச்சர் பிருத்வி ராஜ் செளகான் அல்லது ஏற்கனவே முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரில் ஒருவர் முதல்வர் பதவிக்கு அமர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் ஷிண்டேவின் பெயரை சோனியா தேர்வு செய்துவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர்கள் மாற்றம்:
இந் நிலையில் நிதித்துறையை கவனிக்கவுள்ள பிரதமர் தனக்கு உதவியாக மேலும் ஒரு துணை அமைச்சர் நியமிக்கலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே இந்தத் துறையில் பழனிமாணிக்கம் உள்பட 2 இணையமைச்சர்கள் உள்ளனர்.
அதே போல உள்துறையில் உள்ள இரு இணையமைச்சர்களையும் பிரதமர் மாற்றலாம் எனத் தெரிகிறது.