பென்ஷன்: 20 ஆண்டு போராட்டம் - பெண் தியாகிக்கு கை கொடுத்த காங்.
நமது தட்ஸ்தமிழில் கோதையம்மாள் குறித்த செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவருக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை சேர்வைகாரன் புதுத் தெருவில் வசித்து வருபவர் கோதையம்மாள். சுதந்திரப் போராட்ட தியாகி. இவருடைய தந்தை தியாகி அழகப்பபிள்ளை. விடுதலை போராட்ட வீரர் ஆவார்.
பலமுறை விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ்துரை கொலை வழக்கில் 12-வது எதிரி அழகப்பபிள்ளை. அவரது ஒரே மகள்தான் கோதையம்மாள்.
சிறுமியாக இருந்தபோதே சிறை சென்றவர் கோதையம்மாள். தியாகியின் மகளாக இருந்த காரணத்தால் பலமுறை காவல் கைதியாக கொக்கிரகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வெள்ளைக்காரர்களால் பல தொல்லைக்கு ஆளாக வேண்டியிருந்தது. இதனால் தலைமறைவு வாழக்கை வாழ்ந்தவர். இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனது.
நாட்டுக்குப் போராடிய கோதையம்மாள் இப்போது வயோதிகத்தில் வாடி வருகிறார். கூடவே வாழ்வூதியம் இல்லாத அவலமும் சேர்ந்து கொண்டது. காரணம், அவருக்கு இதுவரை அரசு தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை தராமல் இழுத்தடித்து வந்ததே.
தியாகிகளுக்கு வழங்கப்படும் ரூ. 3000 மாதாந்திர ஓய்வூதியத்திற்கான முழுத் தகுதியும் கோதையம்மாளுக்கு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசுக்குப் பரிந்துரையும் செய்துள்ளார்.
மேலும் வாரிசுதாரர்களுக்கான தியாகிகள் ஓய்வூதியம் குறித்து, மாவட்ட அளவிலான தேர்வுக் கமிட்டியில் வைத்து பரிசிலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இதுவரை வரவில்லை.
இதுகுறித்து கோதையம்மாள் கூறும்போது, மாவட்ட அளவிலான தேர்வுக் கமிட்டி தலைவர், மாவட்ட ஆட்சியர் முன்பு ஆஜாராகி எல்லா ஆதாரங்களையும் சம்ர்பித்து தேர்வு செய்து பரிந்துரைத்துள்ளார். செங்கோட்டை நகராட்சியும் ஓய்வூதியம் வழங்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சட்டமன்ற உறுப்பினரும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்தியா தனது 62வது சுதந்திர தினவிழா கொண்டாடும் இந்த வேளையில் கடந்த 20 ஆண்டுகளாக தியாகி ஓய்வூதியம் கேட்டு போராடி வரும் என்னிடம் கூடுதல் ஆவணம் கேட்கிறார்கள் என்றார் வேதனையுடன்.
இந்த நிலையில், கோதையம்மாளின் போராட்டம் அறிந்து தற்போது காங்கிரஸ் கட்சி அவருக்கு கை கொடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் ரூ.3000 பென்ஷனாக வழங்கப்படும் என்று மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா மூலமாக, மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோதையம்மாளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக அரசும் கோதையம்மாளுக்கு மாதந்தோறும் ரூ. 2000 ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.