பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 45 பேர் காயம் - நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு புகழ் பெற்றவை ஆகும்.
இதில் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. காலை 10.25 மணிக்கு அவனியாபுரம், திருப்பரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு நடந்தது.
சீறிபாய்ந்த காளைகளை இளைஞர்கள் தாவி சென்று அடக்க முயன்றனர். இவற்றில் ஒரு சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின. ஏராளமான காளைகள் பிடிபடாமல் தப்பி ஓடின.
மாடுகள் முட்டி தள்ளியதில் ராமன்குளத்தை சேர்ந்த பாண்டி உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், மின் விசிறி, பட்டுசேலை, வேட்டி, துண்டு, பாத்தரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக காளைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. குறைந்த வயது உள்ள 9 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 47 காளைகளுக்கு கொம்பில் இருந்த கூர்மைத் தன்மை மழுங்கடிக்கப்பட்டது. உடலில் எண்ணை தடவி வந்த 39 காளைகளில் எண்ணை தன்மை நீக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
முன்னதாக மேளதாளத்துடன் நாட்டாமை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
திருச்சி, அவனியாபுரம், சோளங்குருணி, கொம்பாடி, கோவில்பாப்பாகுடி ஊர்களிலிருந்து 305 காளைகள் கலந்துகொண்டன.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாராமன், ஆர்.டி.ஓ., ஜெயராஜ், எஸ்.பி.,(பொறுப்பு) செந்தில்குமார் மேற்பார்வையில் நடந்தது.
திருமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செல்வராஜ், வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் வரலட்சுமி, கண்ணன், சுரேஷ் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை, பிராணிகள் நலவாரிய நிர்வாகிகள் பாணிமா, ரமேஷ், பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்பு தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
பாலமேட்டில் 25 பேர் காயம்
இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 25 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொண்டன.
நாளை அலங்காநல்லூரில் ...
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திமுக எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
போட்டி நடக்கும் இடத்தில், பார்வையாளர்களை காளைகள் புழங்கும் இடத்திலிருந்து பிரிக்க மரத் தடுப்புகள் அமைப்படுகின்றன. பார்வையாளர்கள் காலரியும் அமைக்கப்படுகிறது.
மருத்துவர் குழுவும் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாராமன் இன்று போட்டி நடக்கும் இடத்தைப் பார்வையிட்டு ஏற்பாடுகளை மேற்பார்வையிடவுள்ளார்.