டிஎஸ்பி உடையை கழற்றி சிறை-வக்கீல்கள் அக்கிரமம்: கமிஷனர்
சென்னை: சென்னை உயர்நீதமன்றத்தில் நடந்த ரகளையின்போது டிஎஸ்பி ஒருவரை அறையில் பூட்டி அவரது உடைகளைக் கழற்றி அக்கிரமம் செய்துள்ளனர் வக்கல்கள். மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் இந்தத் தகவலை கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் பெரும் ரகளையில் இறங்கினர். பதிலுக்கு போலீஸாரும் தடியடியில் இறங்கியதால் உயர்நீதிமன்றமே போர்க்களமாக மாறியது.
இந்த ரகளையில் பொன்னேரி டி.எஸ்.பி. ரங்கராஜூ மாட்டிக் கொண்டார். ஒரு வழக்கு விஷயமாக உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த ரங்கராஜ் தப்பி ரகளையைப் பார்த்து அங்கிருந்து தப்ப முயன்றார்.
ஆனால் அவரை வக்கீல்கள் பிடித்து ஒரு அறையில் பூட்டினர். மேலும் அவரது சீருடையையும் கழற்றி அராஜகம் செய்துள்ளனர்.
அறைக்குள் சிக்கி தவித்த ரங்கராஜ் தனது செல்போன் மூலம் உயர் அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்.
உடனடியாக விரைந்த அதிகாரிகள் ரங்கராஜுவை மீட்டுள்ளனர். இந்தத் தகவலை கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டி.எஸ்.பி. ரங்கராஜ் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டது எங்களுக்கு தெரியாது. அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டோம் என்று கூறியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
டி.எஸ்.பியை டிரஸ்ஸைக் கழற்றி வக்கீல்கள் நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வக்கீல்களை கைது செய்ய தடை: உயர்நீதி மன்றம்
இதற்கிடையே, இந்நிலையில் சேதமடைந்த உயர்நீதிமன்ற வளாகத்தைப் பார்வையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஜெயபால், பாஷா, தனபாலன் ஆகியோரிடம் வழக்கறிஞர்கள் நடந்த சம்பவங்களைப்பற்றி விளக்கியதாகத் தெரிகிறது.
அதற்குப் பதிலளித்த நீதிபதிகள் இந்த வழக்கு சம்பந்தமாக எந்த வழக்கறிஞர்களையும் கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அனைத்து வழக்கறிஞர்களும் பொறுமையாக இருந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீதிபதிகளின் முன்னிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷன ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதில், காயமடைந்த சில வழக்கறிஞர்கள் மற்றும் காயமுற்றவர்கள் அரசு செலவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
ஒருவேளை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். முதல் தகவல் அறிக்கையின் படி கைதானவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்வோம்.
சம்பவம் சிபிஐ விசாரணைக்கு எடுத்துச்செல்லப்படும். புலன் விசாரணைக்குப்பின் தேவைப்பட்டால் தலைமை நீதிபதிக்குத் தெரிவித்தபின் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் அளித்துள்ள இந்த உத்திரவாதங்களை மீறினால் கோர்ட் உத்தரவை மீறியதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அந்த நீதிபதிகளின் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.