கிரிக்கெட் தாக்குதல்-கோழைத்தனம்: ராஜபக்சே
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
தற்போது நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராஜபக்சே. இலங்கை கிரிக்கெட் அணியினர் லாகூரில் தாக்கப்பட்டது குறித்து தகவல் குறித்து அவர் கூறுகையில், இது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லெண்ணத் தூதர்களாக பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வருத்தத்குரியது.
காயமடைந்த கிரிக்கெட் வீரர்கள், பாதுகாப்பு படையினர் அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து தன்னுடன் சுற்றுப்பயணத்தில் இருந்த வெளியுறவு அமைச்சர் ரோஹித பொக்கல்லகமாவை உடனடியாக பாகிஸ்தானுக்கு செல்லுமாறும் அவர் பணித்தார். இதையடுத்து பொகல்லகமா உடனடியாக இஸ்லாமாபாத் விரைந்தார்.
இலங்கை வீரர்கள் கொழும்பு வந்தனர்...
இந்த தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 25 பேரும் தனி விமானம் மூலம் நேற்று துபாய் சென்றனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை
சுமார் 3.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயகே விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க குடும்பத்தினர், நண்பர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லோகுகே வீரர்களை வரவேற்றார். வீரர்கள் சிலர் காயத்துடன் வருவதை கண்டு அவர்களது உறவினர்கள் கண் கலங்கினர்.
துப்பாக்கி தாக்குதலில் காயமடைந்த சமரவீரா மற்றும் புதிய துவக்க வீரர் தரங்கா பரனவிதர்னா ஆகியோர் விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் மேல்சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவதாகவும், கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் காமினி லோகுகே தெரிவித்தார்.
கேப்டன் ஜெயவர்த்தனே அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. மிகவும் களைப்புடன் காணப்பட்டார். சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸின் வலது காதில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது.
திலகரத்னே தில்ஷன் தனது மூன்று வயது மகனை அந்த அதிகாலையில் விமான நிலையத்தில் பார்த்தவுடன் பரவசமடைந்து ஆரத்தழுவி கொண்டார்.
துணை கேப்டன் சங்ககரா கூறுகையில், இது போல் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்தது என்பதை அறிய வெகு நேரமாகிவிட்டது என்றார்.