வீரர்கள் பலி: பொன்சேகாவிடம் விளக்கம் கேட்கும் ராஜபக்சே
இலங்கை ராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலைப் புலிகள் மீண்டும் ஊடுறுவி வருகின்றனர். இதனால் இலங்கைப் படையினர் குழப்பமடைந்துள்ளனர்.
விஸ்வமடு, யாழ்ப்பாணம், கிலாலி உள்ளிட்ட பல இடங்களில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.
குறிப்பாக விஸ்வமடு பகுதியில் ராணுவ பீரங்கித் தளத்தை தாக்கித் தகர்த்த விடுதலைப் புலிகள் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்து தப்பி ஓடி விட்டனர்.
பீரங்கித் தளத்தை முதலில் கைப்பற்றி அங்கிருந்து ராணுவ பீரங்கிகளை வைத்தே ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் புலிகள். இது இலங்கை அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு, விஸ்வமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஸ்வமடு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் படையினருக்கு கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் காயமடைந்த அதிகாரிகள் தரத்திலான படையினர் சுமார் 77 பேர் வரை கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் மற்றும் கொழும்பு ராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் இதுவரை புதுக்குடியிருப்பு, விஸ்வமடு இழப்புகள் குறித்து அரசுத் தரப்பு கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.
பொன்சேகாவுக்கு ராஜபக்சே உத்தரவு..
ராணுவத் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், விஸ்வமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புக்கள் தொடர்பாக போர்க் களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் ராஜபக்சே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இலங்கை ஊடகவியல் துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தனே, சமீபத்தில், வன்னி போர் நிலை குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் அவரிடமும் விளக்கம் கேட்டுள்ளாராம் ராஜபக்சே.
கொழும்பில் யாப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைப் படையினர் வன்னிப் பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. இதனால்தான் படையினருக்கு இழப்புகள் அதிகம் ஏற்பட்டு விட்டதாக கூறியிருந்தார் யாப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னி தாக்குதலில் 57 தமிழர்கள் படுகொலை:
இதற்கிடையே இலங்கைப் படைகள் நேற்று வன்னியில் நடத்திய பேய்த் தாக்குதலில் 57 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வன்னியிலிருந்து தினசரி 50 பேர் மரணம், 100 பேர் மரணம் என்ற செய்தி வருவது கிட்டத்தட்ட தொடர் கதையாகி விட்டது. அப்பாவித் தமிழர்கள் அடுக்கடுக்காக கொல்லப்பட்டு வரும் நிலையில் இதுவரை இதைத் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த தாக்குதல்களில் 57 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உணவுப்பொருட்களை ஏற்றிய கப்பலில் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் படகின் மூலம் நேற்று வியாழக்கிழமை காலை கரையோரத்திற்கு வந்தபோது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் சம்பவ இடத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளையில் அனைத்துலக சங்க பிரதிநிதிகள் கரைக்கு வந்த போது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மக்களை கொல்கின்ற சிறிலங்கா படை எறிகணைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சை புல்மோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 19 பேர் உயிரிழந்தனர். இதேவேளையில் மாத்தளன் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டிய 5 பொதுமக்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, மாத்தளன் பகுதியில் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.