ஏழைகளுக்கு செல்போன்-லேப்டாப் இலவசம்: பாஜக
டெல்லி: பாஜக ஆட்சியைப் பிடித்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச செல்போன்களும், ஏழை மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரத்திற்கு லேப்டாப் கம்ப்யூட்டரும் வழங்கப்படும் என பாஜகவின் தகவல் தொழில்நுட்ப கண்ணோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளும் பலப்பல வாக்குறுதிகளை அளிக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில், பாஜக, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பல வாக்குறுதிளை அளித்துள்ளது.
தொலைநோக்கு பார்வையுடன் தகவல் தொழில்நுட்பத்துறையில் பரிணமிக்கும் இந்தியா என்ற புதிய பிரசார கொள்கையை பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி டெல்லியில் வெளியிட்டார்.
அப்போது அத்வானி கூறுகையில்,
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்கள் மக்களுக்கு முழு அளவில் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக புதிய கொள்கை வகுக்கப்படும்.
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 கோடி பேர் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்து இருப்பதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குடிமக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவது அவசியம் ஆகிறது.
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு இலவசமாக செல்போன்கள் வழங்கப்படும். வங்கி கணக்குகளை செல்போன் மூலம் கையாளவும் பயிற்சி அளிக்கப்படும்.
5 ஆண்டுகளில் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 40 கோடியில் இருந்து 100 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
1 கோடி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் விலையில் 'லேப்டாப்' கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும். அந்த தொகையை செலுத்த இயலாதவர்களுக்கு லேப்டாப்' வாங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு கோடியே 20 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும்.
- ஊரகப் பகுதிகளில் 1.2 கோடி பேருக்கு ஐடி தொடர்பான வேலைகள்.
- இந்தியாவின் இன்டர்நெட்டை வலுவாக்கும் வகையில் தேசிய டிஜிட்டல் ஹைவே வளர்ச்சித் திட்டம் அமலாக்கப்படும். இதன் மூலம் தொலை தூர கிராமங்களிலும் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும்.
- ஒவ்வொரு சிறு நகரிலும், கிராமத்திலும் 2எம்பிபிஎஸ் திறனுடைய பிராண்ட்பேண்ட் இணைப்பு, கேபிள் டிவி கட்டணத்தில் வழங்கப்படும் (மாதத்திற்கு ரூ. 200க்கும் குறைவாக)
- அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இன்டர்நெட் அடிப்படையிலான கல்வி முறை.
- வீடியோ கான்பரன்சிங் முறை பரவலாக்கப்பட்டு எளிதாக்கப்படும். அனைவருக்கும் இந்த வசதி கிடைக்க வகை செய்யப்படும்.
- ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், தேசிய அளவிலான டெலிமெடிசின் சேவை கட்டமைப்புடன் இணைக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம், ஊரக வளர்ச்சி, சில்லறை வர்த்தகம், உள்ளிட்ட பொருளாதார துறைகளின் மேம்பாடு உறுதி செய்யப்படும்.
- அரசு அலுவலங்கள் முதல் கிராமப் பஞ்சாயத்து வரை இ-கவர்னென்ஸ் முறை அமலாக்கப்படும். இந்தத் திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். நாங்கள் ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் அமலாக்கப்படும்.
- அனைத்து தபால் நிலையங்களும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பல்நோக்கு சேவை மையமாக மாற்றப்படும். அனைத்து தொலைபேசி பூத்துகளும் இன்டர்நெட் மையங்களாக உயர்த்தப்படும்.
- வாக்காளர்கள் தங்களது எம்.பியுடன் ஆண்டின் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக பி.எஸ்.என்.எல் மூலம் 1-800 என்ற கட்டணமில்லாத தொலைபேசி வசதி செய்து தரப்படும்.
- அனைவருக்கும் வாய்ப் (VoIP) வசதி.
- ஐடி குடையின் கீழ் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலிவடைந்த வகுப்பினரின் முன்னேற்றம் அமலாக்கப்படும்.
- சைபர் குற்றங்களைத் தடுக்க டிஜிட்டல் செக்யூரிட்டி ஏஜென்சி தொடங்கப்படும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும். இதன் மூலம் இந்தியா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும். பெருமளவில் வேலைவாய்ப்புகள் பெருகும். கல்வி, சுகாதாரத்துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். ஊழல் குறையும். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மேலும் வலுப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், எம்.பி அருண் சோரி ஆகியோரும் உடன் இருந்தனர்.