1 ரூபாய் போன் பெட்டிகளை உடைத்தெறிந்த ரயில்வே-அதிர்ச்சியில் பி.எஸ்.என்.எல்
சென்னை: பயணிகள் நலனுக்காக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் வசதி கொண்ட காயின் பாக்ஸ் தொலைபேசி பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் கடப்பாறை கொண்டு அடித்து உடைத்து நொறுக்கியுள்ளது. இதனால் சென்னை தொலைபேசி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பொது தொலைபேசி வசதியை பி.எஸ்.என்.எல். அளித்துள்ளது. பிளாட்பாரங்களிலும், ரயில் நிலைய வளாகத்திலும் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் வசதி கொண்ட காயின் பாக்ஸகளை அது அமைத்துள்ளது.
நுழைவு பகுதி, முன்பதிவு செய்யும் இடம், புறநகர் டிக்கெட் மையம் அருகில், பயணிகள் காத்திருக்கும் இடம், பிளாட்பாரம் போன்ற முக்கிய இடங்களில் 36 பொது தொலைபேசி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 35 ஆண்டுகளாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பொது தொலைபேசி வசதியை தபால்- தந்தி துறை செய்து வந்தது.
இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த 25 பொது தொலைபேசி பெட்டிகளை கடப்பாரையை கொண்டு உடைத்து அகற்றியது. ரெயில்வேயின் திடீர் நடவடிக்கையால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எந்த தகவலும் தராமல் டெலிபோன் சேவையை துண்டித்து விட்டதாக பி.எஸ்.என்.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அனுமதி இல்லாமல் டெலிபோன் சேவை வழங்கியதால்தான் அகற்றினோம் என்று ரெயில்வே தரப்பில் கூறுகிறார்கள். அதற்காக இப்படியா கடப்பாறைகளைக் கொண்டு அடித்து உடைப்பது என்று பி.எஸ்.என்.எல், நிர்வாகம் கோபமடைந்துள்ளது.
அனுமதி இல்லாமல் டெலிபோன் பெட்டிகள் வைக்கக் கூடாது. அனுமதிக்க மாட்டோம். இனிமேல் வியாபார ரீதியில் ஒரு பெட்டிக்கு குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் எனவும் ரெயில்வே வலியுறுத்துகிறதாம்.
இந்தப் பஞ்சாயத்து காரணமாக கடந்த பத்து நாட்களாக காயின் பாக்ஸ் வசதி இல்லாமல் உள்ளது. இந்தப் பெட்டிகளில் அரசுப் பணம் உள்ளது. அப்பணத்துடன் பெட்டிளை முடக்கி வைத்திருப்பது சட்டவிரோதம் என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரெயில்வே பொது மேலாளரிடம் பி.எஸ்.என்.எல். தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த முடியும் ஏற்படவில்லை. 3 நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமைதான் இந்த பிரச்சினை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது.
மத்திய அரசின் இந்த இரு துறைகளும் மோதிக் கொண்டிருப்பதால் நஷ்டமடைந்திருப்பது அப்பாவி பயணிகள்தான். அதை ரயில்வே நிர்வாகம் உணர்ந்து விரைவில் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
ஒரு வேளை கூட்டணி மாறி விட்டதால் கடப்பாறை அளவுக்குப் போய் விட்டார்களோ என்னவோ..












Click it and Unblock the Notifications