அத்வானி இதுவரை என்ன செய்துள்ளார்-மல்லிகா

குஜராத் மாநிலம் காந்திநகரில் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் சுரேஷ் பட்டேலி என்பவரை வேட்பாளராக அறிவித்தது.
இதையடுத்து மல்லிகா சாராபாய் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி பிரச்சாரத்தில் கலக்கி வருகிறார். அத்வானியை கடுமையாக விமர்சித்து வரும் அவர் நேற்று பிரசார கூட்டத்தில் பேசுகையில்,
நான் அத்வானியிடம் ஐந்து கேள்விகள் கேட்கிறேன்.
1. கடந்த 5 ஆண்டுகளில் அவர் காந்திநகர் தொகுதி பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் என்ன பேசியிருக்கிறார். அது குறித்து எத்தனை கேள்விகளை எழுப்பியுள்ளார்?
2. காந்திநகரிலும், குஜராத்திலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து அவர் ஏன் பேசவில்லை?
3. காந்திநகர் தொகுதியில் இருக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு அவர் என்ன செய்துள்ளார். இங்கிருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் தேட என்ன வாய்ப்பு வழங்கியுள்ளார்?
4. கடந்த 20 ஆண்டுகளாக் எம்பியாக இருக்கும் நீங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கு செய்தது என்ன?.
5. எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கொண்டு வந்த திட்டங்கள் எவை. அதனால் ஏழை மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது?
இந்த கேள்விகளுக்கு அத்வானி என்னுடன் பொது மேடையில் அமர்ந்து விவாதிக்க முடியுமா?.
அத்வானிக்கு கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி வளர்ச்சி நிதியாக ரூ 10 கோடி வழங்கப்பட்டது. இதில் 2 கோடி மட்டுமே அவர் காந்திநகர் தொகுதி வளர்ச்சிக்கு செலவிட்டுள்ளார். மற்ற ரூ. 8 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார்.
பணத்தைத் திருப்பி கொடுக்கும் அளவுக்கு காந்திநகர் மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாத அளவுக்கு வசதியாக இருக்கிறீர்களா என்ன? இந்த பகுதியில் சுமார் 1 லட்சம் குடும்பத்தினர் கழப்பிடம் கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த பணத்தில் சொந்தமாக கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கலாம் அல்லவா.
காந்திநகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர்கள் காணாமல் போய்விட்டன. பாஜகவினர் பெயர் மட்டும் தான் உள்ளது என்றார் மல்லிகா சாராபாய்.
அத்வானி வேட்பு மனு தாக்கல்:
இந் நிலையில் காந்தி நகரில் அத்வானி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு காந்தி நகர் தொகுதியில் நடந்த கூட்டத்தில் அத்வானி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த பலர் பெருமளவில் கருப்புப் பணம் போட்டு வைத்துள்ளனர். இந்தப் பணத்தைத் திரும்பப் பெற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.
இந்தப் பணத்தை திரும்பக் கொண்டு வந்தால் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
இந்தியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளது. இதை வெளியே எடுத்து வந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நீங்கும்.
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர், லிச்செல்ஸ்டீன் நகரில் உள்ள வங்கியில் பணத்தைப் போட்டு வைத்தனர். ஆனால் அந்த வங்கியை நெருக்கிய ஜெர்மனி அரசு பணம் போட்டு வைத்தவர்களின் பெயர்களைக் கேட்டு வாங்கியது
பின்னர் ஜெர்மனி நிதியமைச்சர் கூறுகையில், எந்த நாடாவது தங்களது நாட்டவர் பணத்தைப் போட்டு வைத்திருக்கும் விவரத்தைக் கேட்டால் கொடுப்போம் என்றார்.
இதையடுத்து நான் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினேன். நமது நாட்டவர் போட்டு வைத்திருக்கும் பணம், யார் என்ற விவரத்தைக் கேளுங்கள் என்று கோரியிருந்தேன். ஆனால் கடிதம் வரப் பெற்றது என்ற பதில் மட்டுமே பிரதமரிடமிருந்து வந்தது.
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க அரசு, இதேபோல வெளிநாட்டு வங்கிகளிடம், தங்களது குடிமக்கள் போட்டு வைத்துள்ள பணம் குறித்த விவரங்களை கேட்டுள்ளது. அதைக் கொடுக்க மறுக்கும் வங்கிகளின் அங்கீகாரத்தையே ரத்து செய்து விடுவோம் என மிரட்டியுள்ளது.
21வது நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் இதை செய்யும்.
அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை நம்பர் ஒன் நாடாக உயர்த்துவதே பாஜகவின் லட்சியம்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களையும், பிற மாநிலங்களையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நான் சிறப்பு நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் இன்று உயரிய இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு நரேந்திர மோடி போன்றோர்தான் காரணம். இந்த அடித்தளத்தை இட்டது மோடியைப் போன்றவர்கள்தான் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications