நேற்றும் இலங்கைப் படைகள் கொலை வெறித் தாக்குதல் - 287 தமிழர்கள் பலி
வன்னி: போர் நிறுத்தத்திற்கு முன்பே ஏராளமான தமிழர்களைக் கொன்று விட வேண்டும் என்ற வெறியுடன் செயல்படுவதைப் போல நேற்று முன்தினம் 294 தமிழர்களைக் கொன்ற இலங்கைப் படைகள் நேற்றும் வெறியாட்டம் நடத்தி 287 தமிழர்களைக் கொன்று குவித்தது.
வன்னியில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் வெளியேற வசதியாகவும், தமிழ் மற்றும் சிங்களப் புத்தாணண்டையொட்டியும் 2 நாள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்திருந்தார்.
ஆனால் நேற்றும் இலங்கைப் படைகள் படுகொலை வெறியாட்டம் நடத்தின.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று மாலை நான்கு மணி வரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 287 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 346 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கைப் படைகள் போர் நிறுத்தம் குறித்து சற்றும் கவலைப்படாமல் தாக்குதலை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
நேற்று காலை முதல் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி மீது தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கியுள்ள சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பகுதிகளை நோக்கியும் வழமைபோலவே எறிகணைத் தாக்குதல்களைப் பெருமளவுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளான அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் இடைக்காட்டு ஆகிய பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி மற்றும் தொலைதூர துப்பாக்கி தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வந்தது.
நேற்று மாலை 4 மணி வரையில் நடைபெற்ற தாக்குதல்களில் 287 தமிழர்கள் பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ளனர். 346 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தாக்குதல்கள் தொடர்வதால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என புதினத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
எங்கு பார்த்தாலும் மக்கள் உயிரைக்காக்க பயந்தோடி வரும் அவலம் இரும்பு மனதையும் உருக்குவதாக உள்ளது.
இலங்கைப் படைகளை எதிர்த்து விடுதலைப் புலிகளும் கடும் தாக்குதல் நடத்தி வருவதால் இடையில் சிக்கியுள்ள அப்பாவிகளின் கதி மகா கோரமாக உள்ளது.
இன்று அதிகாலை முதல் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்த போதிலும் தாக்குதல் நிலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் சிறிலங்கா படைத்தரப்பினர் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் தொடரும்-கோத்தபாயா கொக்கரிப்பு:
போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க முடியாது. தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் என ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சே கொக்கரித்துள்ளார்.
இலங்கை அரசு அறிவித்துள்ள போர் நிறுத்தம் குறித்து யாருமே திருப்தி வெளிப்படுத்தவில்லை. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட நேற்றும் நேற்று முன்தினமும் 500க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்துள்ளது இலங்கைப் படைகள்.
இந்தநிலையில்,போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க முடியாது என கோத்தபாயா ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
போர் நடவடிக்கையை நிறுத்தவேண்டும் என்று உள்நாட்டு மற்றும் அனைத்துலக வற்புறுத்தல்கள் எந்த அளவுக்கு வந்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
பயங்கரவாதத்தை முழுமையாக அழிக்கும் வரையில் எங்கள் தாக்குதல் தொடரும். போர்நிறுத்தம் நீடிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் கோத்தபாயா.
இதேபோல போர் நிறுத்தத்தை நீடிக்கக் கூடாது என ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் வலியுறுத்தியுள்ளார்.
இது நாடகம்-தா.பாண்டியன்:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,
இன்று தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டு போல இலங்கையிலும் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. அது கூட நாடகம்தான். நேற்று கூட இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு அப்பாவிகுழந்தைகள், பெண்கள் என சுமார் 200 பேர் பலியாகி உள்ளனர்.
ஆனால் சிலர் தாங்கள் பேரணி நடத்தியதால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கின்றனர். இப்படி கூறி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். இது அவர்களின் அண்ட புழுகு வேலை என்றார்.