சாலை மறியல்-பஸ்கள் நிறுத்தம்-கடைகள் அடைப்பு
மாநிலம் முழுவதும் பல இடங்களில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதையடு்த்து தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது.
சென்னையில் திமுகவினர் அண்ணா சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோட்டில் திமுகவினர் கடைகளை அடைக்குமாறு கூறியதால் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதட்டமான நிலை காணப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் முடங்கியது.
புதுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்கும் பஸ் போக்குவரத்து முடங்கியது. நகர் முழுவதும் பதட்டம் காணப்படுகிறது. கடைகளும் அடைக்கப்பட்டன.
மதுரையில் மு.க.அழகிரி உண்ணாவிரதம் இருந்து வரும் மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
ஜெ. பொள்ளாச்சி வருகை-போக்குவரத்து நிறுத்தம்
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மாலை பொள்ளாச்சிக்கு பிரசாரம் செய்ய வருகிறார். ஆனால் கருணாநிதி உண்ணாவிரதம் காரணமாக இன்று காலை முதல் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் திமுக, அதிமுகவினர் இடையே பெரும் மோதல் மூளும் சூழல் எழுந்தது.
பிற்பகலில் முதல்வர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்ட பின் நிலைமை சகஜமானது. கடைகள் திறக்கப்பட்டன, போக்குவரத்தும் தொடங்கியது.
பஸ்களை நிறுத்தல் கூடாது-கருணாநிதி
முன்னதாக பஸ்களை நிறுத்துதல், கடைகளை மூடச் சொல்லுதல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து உண்ணாவிரத மேடையில் படுத்தபடியே அவர் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டும், அப்பாவித் தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில்தான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.
இந்த சமயத்தில் கடைகளை மூடச் சொல்லுதல், பஸ்களை நிறுத்தச் சொல்லுதல், தாக்குதல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.
நமக்கும், நமது அரசுக்கும், திமுகவுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலவிஷமிகள் இத்தகைய செயலில் ஈடுபடக் கூடும்.
பஸ்கள் இயல்பாக ஓடிக் கொண்டிருக்கட்டும், கடைகள் இயல்பாக நடந்து கொண்டிருக்கட்டும். யாரும் அவற்ற நிறுத்தவோ, மூடச் சொல்லவோ கூடாது என்று தமிழ் மக்களை, பொதுமக்களை, சகோதர, சகோதரிகளை, தாய்மார்களை, இளைஞர்களை, மாணவர்களை தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
ஆனால், அதை காதில் போட்டுக் கொள்ளாமல் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.