'இளங்கோவன்'-இளந்தமிழர் இயக்கத்தினர் விடுதலை
சென்னை: பெரியாரை அவமதிக்கும் வகையி்ல் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மன்னிப்பு கேட்கக் கோரி ஈரோட்டில் உள்ள அவரது வீட்டை முற்றுகையி்ட்டுப் போராட்டம் நடத்த முயன்று கைதான இளந்தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 5ம் தேதி ஈரோடு பன்னீர் செல்வம் புங்காவில் தொடங்கவிருந்த முற்றுகை ஊர்வலம் புறப்படும் முன்பாகவே இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஈரோடு மாவட்டச் செயலாளர் வெ.இளங்கோவன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தவிர தனித் தனியாக முற்றுகையிட வந்த சமர்ப்பா குமரன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் செல்வராசு, தாயம்மாள், பரமேசுவரன் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் 18 பேரை விடுவித்து விட்டு 28 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அன்றிரவே கோவை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.
இவர்களைக் கைது செய்யக் கோரி ஈரோடு மாவட்ட கோர்ட்டில் வக்கீல் ப.பா.மோகன் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வாரந்தோறும் திங்கள்கிழமை கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடருவது எனவும், கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட இயக்கத்தினரை நிர்வாண சோதனைக்கு உட்படுத்தியதற்காகவும், ஜாமீன் வந்தும் கூட இழுத்தடித்து விதிகளுக்கு புறம்பாக தாமதமாக விடுதலை செய்த கோவை மத்திய சிறை அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது எனவும் இளந்தமிழர் இயக்கம் முடிவு செய்துள்ளது.
மேலும் இளங்கோவனுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தவும் இளந்தமிழர் இயக்கம் முடிவு செய்துள்ளது.