நான் ஒரு 'அரசியல் சச்சின்'- நரேந்திர மோடி
அகமதாபாத்: கிரிக்கெட்டில் இந்திய அணி தோற்றுவிட்டால் சச்சினை தான் அதிகம் விமர்சிப்பார்கள். காரணம் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அதீத எதிர்பார்ப்பு தான். இதேபோல் தான் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு என்னை விமர்சிக்கிறார்கள் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்காக அக்கட்சியை சேர்ந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். ஆனால், பாஜக தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தோல்விக்கு அவர் தான் காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் அகமதாபாத் நகரில் நடந்த பாஜக கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மோடி பேசுகையில்,
தற்போது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படாததாக என் மீது சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். நாட்டிலே எதிர்பார்ப்பை வைத்து விமர்சிக்கப்படும் ஒரே தலைவராக நான் தான் இருப்பேன் என நினைக்கிறேன்.
கிரிக்கெட்டிலும் இதே தான் நடக்கிறது. ரசிகர்கள் சச்சினை தவிர்த்து யார் மீதும் அதிக எதிர்பார்ப்பு வைக்கமாட்டார்கள். சச்சின் குறைந்த ரன்களுக்கு அவுட்டானால் கூட போதும் அவரை விமர்சிக்க துவங்கிவிடுவார்கள். அவர் ரன்களே எடுக்கவில்லை என்று கூட சொல்லிவிடுவார்கள்.
இந்த விமர்சனங்களை, அதை எடுத்து வைக்கும் விமர்சகர்களையும் நான் வரவேற்கிறேன். என் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அவர்களது விமர்சனத்தை நல்ல வாய்ப்பாக ஏற்று கொண்டு சிறப்பாக செயலாற்றுவேன். பாஜக தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களின் ஆசியுடன் இந்த விமர்சனங்களை வெற்றியாக மாற்றுவேன்.
இந்த தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்ததால், என்னால் குஜராத்தில் அதிகம் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இருந்தாலும் 2004 நாடாளுமன்ற தேர்தலை விட இம்முறை குஜராத்தில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளை கிடைத்துள்ளது. இதற்கு காரணமான மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார் மோடி.
பின்னர் பேசிய அத்வானி, தேசிய அளவில் பாஜக தோற்றதற்கு மோடி காரணமல்ல என்றார்.