பெண் போலீஸ் வேடத்தில் பெண்ணை கடத்திய வாலிபர்
சென்னை: பெண் ஒருவரை கட்டாயத் திருமணம் செய்வதற்காக பெண் போலீஸ் வேடமிட்டு கடத்திய நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
சென்னை திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 6 மணியளவில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது ஒரு டாடா சுமோ கார் வந்தது. பெண் 'சப் இன்ஸ்பெக்டர்' ஒருவர் காரிலிருந்து இறங்கினார். இறங்கிய அவர் சாலையில் போய்க் கொண்டிருந்த ஒரு பள்ளி மாணவியை பிடித்து காருக்குள் தள்ளி கதவைச் சாத்தினார். உடனடியாக கார் பறந்தது.
இதைப் பார்த்த பொது மக்கள் ஏதோ விசாரணைக்காக கூட்டிச் செல்கிறார்கள் போல என நினைத்தனர். ஆனால் கார் கிளம்பியபோது உள்ளே இழுக்கப்பட்ட மாணவி உரத்த குரல் எழுத்து சத்தம் போட்டார். இதையடுத்து மக்கள் திடுக்கிட்டனர்.
சம்திங் ராங் என நினைத்த அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
அங்குள்ள சுரங்கப் பாதை வழியாக கார் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அருகில் இருந்த சோதனைச் சாவடி உஷார்படுத்தப்பட்டது.
சோதனைச் சாவடிக்கு கார் வந்ததும் தயாராக இருந்த போலீஸார் காரை மடக்கி நிறுத்தினர்.
உள்ளே இருந்தவர்களை வெளியே அழைத்தனர். அப்போதுதான் சப் இன்ஸ்பெக்டர் பெண் அல்ல ஆண் என்று தெரிய வந்து அதிர்ந்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவி கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணை நடந்தது.
விசாரணையில், பெண் சப் இன்ஸ்பெக்டராக வேடம் கட்டிய நபரின் பெயர் முருகன் என்றும், மாணவியைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட மாணவியின் பெயர் சுகன்யா. 17 வயதே ஆகிறது. பிளஸ்டூ படித்து வருகிறார். திருவொற்றியூர் சண்முகாபுரத்தில் வீடு உள்ளது.
சுகன்யாவை, முருகன் காதலித்துள்ளார். ஆனால் அந்தக் காதலை சுகன்யாவும், அவரது பெற்றோரும் ஏற்கவில்லை. இதையடுத்து கட்டாயத் திருமணத்திற்குத் திட்டமிட்டு கடத்தியுள்ளார் முருகன்.
கடத்திய முருகனுக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை அருகே உள்ள நரியம்பாடி. 3வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சிறு வயது முதலே அவர் சுகன்யாவைப் பார்த்து வளர்ந்துள்ளார். சுகன்யாவின் அழகு அவரைக் கவரவே இதயம் பட முரளி கணக்கில் மனசுக்குள்ளாகவே காதலித்து வந்துள்ளார்.
சுகன்யா வளர்ந்து பெரிய பெண் ஆனதும் கல்யாணம் செய்ய அவராகவே திட்டமிட்டிருந்தார். தொடர்ந்து சுகன்யா பின்னால் அவர் சுற்றவே, சுகன்யாவின் அக்கா அதைத் தட்டிக் கேட்டுள்ளார். ஆனாலும் முருகன் விடவில்லை.
சுகன்யாவின் அக்கா தனக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து அவரது செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் கொடுத்து டார்ச்சர் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அக்கா போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் முருகனைக் கைது செய்தனர். சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் பெண் கொடுக்குமாறு சுகன்யா வீட்டாரை கேட்டுள்ளார். அவர்கள் முகத்தில் அடித்தாற் போல பேசி விட்டனர்.
முறைப்படி பெண் கேட்டும் கொடுக்கவில்லையே என்று கோபமடைந்த கடத்தல் பிளானை போட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு தான் வைத்திருக்கும் டிராவல்ஸ் நிறுவன டிரைவர் நாகராஜை துணைக்குச் சேர்த்துக் கொண்டார்.
படு புத்திசாலித்தனாக பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடம் போட்டு (பார்க்க பெண் போலவே இருப்பதால் இந்தத் திட்டத்தைப் போட்டாராம்) கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
அவ்வை சண்முகி கணக்காக, ஏகப்பட்ட மேக்கப் ஐட்டங்கள், தொப்பி, விக் உள்ளிட்டவற்றை வாங்கி வேடம் போட்டுள்ளார்.
நேற்று சிக்காமல் தப்பி ஓடிய நாகராஜை, போலீஸார் இன்று கைது செய்து விட்டனர்.
பொதுமக்கள் படு உஷாராக போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததால், எந்தவித அசம்பாவிதமும் இன்றி கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது.












Click it and Unblock the Notifications