செரியன் மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்ட 10 கயானா சிறார்களும் விடுவிப்பு
சென்னை: பணம் கட்டாததால் சிறை வைக்கப்பட்ட 10 கயானா சிறார்களையும் டாக்டர் கே.எம். செரியன் மருத்துவமனை விடுவிக்க முன்வந்துள்ளது.கயானா நாட்டு அதிபர் பாரத் ஜக்தியோவின் முன்னாள் மனைவி வர்ஷினி சிங் தியோ. இவர், கயானாவிலிருந்து ஏராளமான சிறார்கள், டாக்டர் செரியனின், பிரான்டியர் லைப்லைன் இருதய நோய் மருத்துவமனைக்குக் கொண்டு வருவது வழக்கம்.
இங்கு அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர் அவர் அவர்களை தனது நாட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்வார். இதற்கு கயானாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்கிது.
ஆனால் கடந்த இரண்டு முறையாக சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10 சிறார்களை கயானாவிலிருந்து இருதய அறுவைச் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்த குழந்தைகளுக்கான செலவுகளை வழங்க கயானா தொண்டு நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
மேலும் வர்ஷினி சிங்தான் இதற்குக் காரணம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் குற்றம் சாட்டியது. இதையடுத்து வர்ஷினி சிங்கை மருத்துவமனை நிர்வாகம் சிறை பிடித்தது. மேலும், சிகிச்சை பெற்று நாடு திரும்பத் தயாராக இருந்த 10 குழந்தைகளையும் வெளியே விடாமல் அவசர சிகிச்சைப் பிரிவில் அடைத்து வைத்து விட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர் சோமா குஹா சக்ருதா கூறுகையில், கயானா குழந்தைகளுக்கு நாங்கள் ஏற்கனவே சிகிச்சை அளித்துள்ளோம். ஆனால் கடந்த 2 முறையாக இவர்களது சிகிச்சைக்கான பணத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து வர்ஷினி சிங்குக்கும், தொண்டு நிறுவனத்துக்கும் டாக்டர் செரியன் கடிதம் எழுதி, சிகிச்சைக்கான செலவுகளை முறையாக செலுத்துமாறு கூறியிருந்தார்.
தொண்டு நிறுவனம், இந்த குழந்தைகளைக் காட்டி பணம் பெறுகிறது. ஆனால் எங்களுக்குரிய சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த அவர்கள் மறுக்கின்றனர் என்றார்.
இந்த நிலையில் டாக்டர் செரியனுக்கும், வர்ஷினி சிங்குக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து வர்ஷினி சிங் கூறுகையில், நாங்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளோம். அதன்படி, தர வேண்டிய பாக்கித் தொகையை இன்னும் ஆறு மாதங்களில் திருப்பிச் செலுத்தி விடுவோம்.
இன்றே குழந்தைகள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவர். ஏர் இந்தியா நிறுவனத்துடன் நாங்கள் பேசி வருகிறோம். இன்று இரவே குழந்தைகளை கயானாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
டாக்டர் செரியன் கூறுகையில், மிகப் பெரிய குழப்பமாகி விட்டது. நான் இல்லாததால்தான் இந்த குழப்பம் என்று கருதுகிறேன். இருப்பினும் எங்களுக்கும், கயானா குழுவினருக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏதும் இல்லை. நடந்தது துரதிர்ஷ்டவசமானது என்றார்.