டாக்டர்களுடன் அரசு பேச வேண்டும்-ஜெ
இதற்கிடேயே வேலை நிறுத்தத்தை முடிவுக்கக் கொண்டு வர பயி்ற்சி டாக்டர்களுடன் சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்புராஜ் இன்று பேச்சு நடத்தினார்.
உதவித் தொகை உயர்வு கோரி பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் தொடங்கியுள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. நோயாளிகளைக் கவனிக்க முடியாமல் அரசு டாக்டர்கள் திணறி வருகின்றனர்.
அரசு டாக்டர்களை முழுமையாக பயன்படுத்தி அவசர அறுவை சிகிச்சை, புறநோயாளிகள், உள் நோயாளிகள் சிகிச்சை போன்றவற்றை சமாளித்து வருகிறார்கள்.
முக்கியமான அறுவைச் சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது. சாதாரண அறுவைச் சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன.
அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்படுவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சர்க்கரை நோய், இருதய நோய், பொது மருத்துவப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. பயிற்சி டாக்டர்கள் ஆபரேஷன் தவிர மற்ற அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். 15 நாட்களாக போராட்ட களத்தில் பயிற்சி டாக்டர்கள் இருப்பதால் நோயாளிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதையடுத்து போராட்டத்தை ஒடுக்கவும், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையம், இ.எஸ்.ஐ. ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களை சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்ற அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நேற்று 20 டாக்டர்கள் பணியில் சேர்ந்தனர். இன்று மேலும் 30 டாக்டர்கள் வர இருக்கிறார்கள். இதுதவிர கூடுதலாக 500 தற்காலிக டாக்டர்களையும் நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டாக்டர் பணிக்காக பதிவு செய்து காத்து இருப்பவர்கள் பெயர் பட்டியலை சுகாதாரத்துறை பெற்று உள்ளது. வேலைக்காக காத்திருக்கும் அவர்களை தற்காலிக பணியில் அமர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
500 டாக்டர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளது.
போராட்டம் வாபஸ் பெறப்படாவிட்டால் உடனடியாக தற்காலிக டாக்டர்களை நியமிக்கவுள்ளனர்.
தற்காலிக டாக்டர்கள் தின ஊதிய அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஒருமுறை பணியில் அவர்கள் அமர்த்தப்பட்டுவிட்டால் அவர்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்கும் வகையில் அரசு தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு நிரந்தரமாக்கிக் கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது.
விரைவில் தற்காலிக டாக்டர்களை நியமித்து மருத்துவ சேவையை துரிதப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
அரசு டாக்டர்கள் கோரிக்கை..
இதற்கிடையே பயிற்சி மருத்துவர்கள், முது நிலை மாணவர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட வேண்டும். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முன்வர வேண்டும். நோயாளிகள் பாதிக்கப்படுவதற்கு நாம் காரணமாகி விடக் கூடாது என்று தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உண்ணாவிரதம்-மாணவர் மயக்கம்:
இந நிலையில் உண்ணாவிரதம் இருந்த கி்ஷ்சாந்த் என்ற மாணவர் இன்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளி்க்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் அரசுடன் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டால் போராட்டம் வாபசாகும் என்று தெரிகிறது.