பெண் அர்ச்சகர்கள்-இந்து முன்னணி கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆலயங்களில் பெண் அர்ச்சகர்களை நியமித்து பாரம்பரிய, ஆகம நடைமுறைகளை சீர்குலைக்க தமிழக அரசு முயற்சிப்பதாக இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருக்கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்கப் போவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறார். இது இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, இந்துக்களின் நடைமுறைகளை, மரபுகளை குலைத்து ஆலயங்களின் புனிதத்தை கெடுக்கும்.

பல அம்மன் கோவில்களில் தாய்மார்கள் பூஜாரிகளாக இருந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அடிப்படை தேவையை கூட இந்து அறநிலையத்துறையோ, தமிழக அரசோ செய்து கொடுப்பதில்லை. அதே சமயம் வருமானம் அதிகமாக வருவதாகத் தெரிந்தால் உடனே அங்கு ஒரு தனி அலுவலரை போட்டு உண்டியல் வைத்து கோவிலை அரசு ஆக்கிரமித்து கொள்கிறது.

இந் நிலையில், ஆலயங்களில் பெண் அர்ச்சகர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பு, நடைமுறையில் இருக்கும் பாரம்பரிய, ஆகம நடைமுறைகளை சீர்குலைக்க அரசு எடுக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

கோவில்களில் பூஜை முறைகள், ஒழுங்குகள் ஆன்மீக பெரியோர்கள் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்பட வேண்டும் தவிர தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்பது போல தமிழக அரசு ஆலய வழிபாட்டு முறைகளில் தலையிடுவது அத்துமீறிய செயல்.

மரபுகளை, வழிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை, அறிவிப்பு நிலையிலேயே தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.
தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமை...

இதற்கிடையே சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் வாதாடினார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வந்தனர். ஆனால், அவர்கள் கோவிலில் தமிழுக்குத் தடை விதித்ததாலும் அவர்கள் மீது பல புகார்கள் வந்ததாலும் கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் வழக்குத் தொடர்ந்து இடைக்கால தடை பெற்றனர்.

இதை எதிர்த்து தமிழக அரசு வழக்குத் தொடர்ந்ததையடுத்து செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு உரிமை உண்டு என்று கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி தீர்ப்பு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவே நடராஜர் கோவிலை நிர்வகிக்க, செயல் அதிகாரி நியமிக்கப்பட்டார். இப்போது கோவில் அரசன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

(இந்த வழக்கில் தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சாமி மனு செய்தார். அவரது மனு விசாரணை வந்தபோது சாமியை வழக்கறிஞர்கள் தாக்கியது நினைவுகூறத்தக்கது)

நடராஜரும் தீட்சிதர்களில் ஒருவர்:

இந் நிலையில் நீதிபதி ரவிராஜபாண்டியன், நீதிபதி ஜனார்த்தனராஜா ஆகியோர் முன்னிலையில் அப்பீல் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் கூறுகையி்ல்,
செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு உரிமை உண்டு என்று கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. பல நூற்றாண்டுகளாக தீட்சிதர்கள்தான் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். நடராஜரும் தீட்சிதர்களில் ஒருவர். எனவே நடராஜரையும், தீட்சிதர்களையும் பிரித்து பார்க்க முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+