சினிமா பைனான்சியரின் ரூ. 8 கோடி நிலம் 'சுவாஹா'!
சென்னை: திரைப்பட பைனான்சியரின் ரூ. 8 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு தம்பதிக்கு வலை வீசப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் கல்பாத்தி அகோரம், திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவர். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் சொந்தமான ரூ.8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் வேளச்சேரியில் உள்ளது.
இந்த நிலத்தை போலி போலி ஆவணம் மூலம் ஒரு கும்பல் விற்பனை செய்துவிட்டதாகவும், இதற்காக போலி கிரையப் பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசில் புகார் தரப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் மையிலாப்பூரைச் சேர்ந்த 2 பேரை ஏற்கனவே கைது செய்துவிட்டனர்.
இந் நிலையில் தம்பிரான் (60) என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த நில விற்பனையில் மையிலாப்பூரைச் சேர்ந்த கணவன்- மனைவிக்கம் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாகிவிட்ட இவர்களைப் பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.