இது இதயங்களின் திறப்பு விழா-கருணாநிதி
பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில்,
நான் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் ஒரு சபதம் செய்திருந்தேன். கடந்த 18 ஆண்டுகளாக பெங்களூரில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் அது கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் அவர்களுக்குச் சொன்ன ஒரு செய்தி.. பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மூடப்பட்டு கிடக்கிறது. அது என்று திறக்கப்படுகிறதோ அப்போது தான் நான் பெங்களூரில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க வருவேன் என்று கூறியிருந்தேன்.
அந்த சபதத்தை நான் நிறைவேறேறவில்லை. கர்நாடக முதல்வர் எதியூரப்பா அந்த சபதத்தை நிறைவேற்றித் தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி.
இந்த விழா வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல. இது இரு மாநிலங்களின் இதயங்களின் திறப்பு விழா.
தமிழகத்தில் நடந்து வரும் எங்கள் திமுக ஆட்சியில் தான் சர்வஞனரின் கருத்துக்கள், கவிதைகளை 'உரைப்பா' என்ற புத்தகமாக மொழிபெயர்த்து வெளியிட்டோம். அப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது. அப்போது சர்வஞரின் உரைப்பாவை வெளியிடக் கூடாது என்று எந்த தமிழரும் சொல்லவில்லை.
புரட்சிக் கவிஞரான சர்வஞனர் குறித்து இன்னும் அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருப்பதற்குக் காரணம் அவர் மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தான். அவர் முற்போக்குக் கருத்துக்களை, ஜாதி, மத பேதங்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்த புரட்சியாளர்.
500 ஆண்டுகளுக்கு முன் இங்கே திருவள்ளுவரி்ன் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் சர்வஞனர்.
இங்கே திருவள்ளுவரின் சிலையைத் திறக்க பெங்களூர் தமிழச் சங்கத்தினர் தமிழக முதல்வரகள், கர்நாடக முதல்வர்கள், நீதிமன்றங்கள், பல கவர்னர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் யாரைக் கொண்டு வந்தால், கர்நாடகத்தில் யாரைக் கொண்டு வந்தால் திருவள்ளுவரின் சிலை திறக்கப்படும் என்று கருதி தமிழக மக்கள் என்னையும் கர்நாடக மக்கள் எதியூரப்பாவையும் முதல்வர்களாக்கியுள்ளனர்.
கடந்த மாதம் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளதை அறிந்தேன். நான் தமிழக முதல்வர்.. அவரைப் போய் நான் ஏன் சந்திக்க வேண்டும் என்று நினைக்காமல் அவரை மருத்துவமனையில் வந்து சந்திக்க நேரம் கேட்டேன்.
அதற்கு அவர், என்ன இருந்தாலும் கருணாநிதி மிக மூத்த தலைவர். அவரை நான் போய பார்ப்பது தான் சரி என்று சொல்லி என் வீட்டுக்கே வந்தார். அப்போது பல பிரச்சனைகள் குறித்துப் பேசினோம். குறிப்பாக திருவள்ளுவர் சிலை பிரச்சனை குறித்துப் பேசினோம்.
அப்போது எதியூரப்பா வள்ளுவர் சிலையை திறக்க நான் உதவுகிறேன். சென்னையில் சர்வஞ்னர் சிலை திறப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார். அதற்கு நான் ஐயா.. நாங்கள் எப்போதோ அதற்குத் தயாராகிவிட்டோம் என்று சொல்லி சர்வஞ்னரின் சிலையைத் திறக்க இடத்தைச் தேர்வு செய்யச் சொன்னேன்.
இடத்தை அவர்கள் தேர்வு செய்துவிட்டார்கள். இப்போது அங்கு சர்வஞனரின் சிலை திறப்புக்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டுள்ளன.
எங்களைப் போல விட்டுக் கொடு்த்து நடந்து கொண்டால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த விழா.
இது அரசியல் விழா அல்ல.. அற விழா. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் எல்லாமே ஒரே உதிரத்திலிருந்து உருவான மாநிலங்கள் தான்.
இந்த சிலை திறப்பு மூலம் இரு மாநில உறவுகள் மட்டுமல்ல இந்திய தேசிய ஒருமைப்பாடும் வலுப்படும் என்பது நிச்சயம். இதை மற்ற மாநிலங்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார் கருணாநிதி.
விழாவில் அல்சூர் பகுதியை உள்ளடக்கிய சிவாஜி நகர் தொகுதி எம்.எல்.ஏ ரோஷன் பெய்க் பேசுகையில், நான் இதே ஆர்.பி.ஏ.என்.எம். பள்ளியில்தான் படித்தேன். சிவாஜி நகர் தொகுதியில் நான் வெற்றி பெற தமிழர்கள்தான் காரணம்.
அன்றும், இன்றும், என்றும் தமிழர்களுடன்தான் நான் இருப்பேன் என்றார்.
முன்னாள் துணை முதல்வர் சித்தராமையா பேசுகையில், உலகிலேயே திருக்குர்ரான், பைபிளுக்குப் பிறகு அதிக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட சிறப்பான நூல் திருக்குறள்தான்.
திருவள்ளுவரின் சிலை இங்கே திறக்கப்படுவதைப் போல கன்னடக் கவி சர்க்னாவின் சிலை சென்னையில் திறக்கப்படுவது சிறப்பு வாய்ந்தது என்றார்.