Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்றிக் காய்ச்சலை துளசி குணப்படுத்தும் - ஆயுர்வேத நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

Tulsi
லக்னோ: மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.

இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு.

நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.

பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி.

டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும்.

20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும்.

இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார்.

நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல்.

துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா (ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா) ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை.

துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.

சித்த மருத்துவத்திலும் வழி உண்டு...

பன்றிக் காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தின் மூலம் முன் கூட்டியே வராமல் தடுக்க முடியும் என்கிறார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய உதவி இயக்குநர் டாக்டர் ஜெகஜோதி பாண்டியன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உடலில் சளி பிடிக்காமல் இருப்பதன் மூலம் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆடா தொடா, அரசை, அதி மதுரம், கண்டங்கத்திரி, திப்பிலி போன்றவை மார்பு சளியை வெளியேற்றும் தன்மை கொண்டவை.

இஞ்சியால் தடுக்க முடியும்...

என்றாலும் சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சிறப்பு மருத்துவ குணம் இஞ்சிக்கு மட்டுமே உண்டு. உணவில் அதிக அளவில் இஞ்சி, சுக்கு, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட், பாதாம், பூமி சர்க்கரை கிழங்கு, பூனைக்காலி அமுக்ராங் கிழங்கு போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதன் மூலம் சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை சித்த மருத்துவத்தில் அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.

வெங்காயம் - பூண்டும் கை கொடுக்கும்...

அதேபோல, வேம்பு, துளசி, வெங்காயம், பூண்டு ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்.

ஆங்கில மருந்துகளை சாப்பிட்டபோதும் இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வரலாமாம்.

வேம்பு நீரிழிவு நோயை தடுப்பதுடன் வைரஸ் கிருமிகள் மனிதனை தாக்காமல் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. காய்ச்சலையும் குறைக்கும். ப்ளு காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி, அலர்ஜி, தோல் வியாதிகள், மலேரியா போன்றவற்றுக்கு வேம்பு ஒரு தீர்வாகும்.

மற்றொரு இயற்கை மூலிகையான துளசி பாக்டீரியாக்களை கொல்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வெங்காயத்தில் பல்வேறு வைரஸ் எதிர்ப்பு ரசாயன பொருட்கள் உள்ளன. தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

இதேபோல் பூண்டும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பாக்டீரியா வைரஸ்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. ரத்தத்தை சுத்திகரித்து இலகுத்தன்மையாக்குகிறது.


இன்னொன்று பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அனைத்து வகையான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாமிச உணவு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+