ஸ்வைன் - ஆந்திராவில் இருவர் பலி - இதுவரை 107 பேர் மரணம்
ஹைதராபாத்: பன்றிக் காய்ச்சலுக்கு ஆந்திராவில் இன்று இரண்டு பேர் உயிரிழந்தனர். அங்கு பன்றிக் காய்ச்சலுக்கு இவர்களே முதல் பலி ஆவர். இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் நேற்று மாலை வரை இந்தியா முழுவதும் சுமார் 103 பேரின் உயிரை குடித்திருந்தது.
நேற்று இரவு பெங்களூரை சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் ஸ்வைன் ப்ளூ நோய்க்கு பலியானார். எலஹங்கா பகுதியை சேர்ந்த இவர் கடந்த ஒரு வாரமாக பன்றி காய்ச்சல் அறிகுறியால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார்.
ஆனால் மிக தாமதமாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் மரணமடைந்தார். ஆனால், அவரது ரத்த மாதிரி பரிசோதனை நேற்று தான் வெளியிடப்ப்டடது. அதில் அவர் பன்றி காய்ச்சல் காரணமாக இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை சுகாதார துறையினர் வெளியிடவில்லை.
மேலும் பெங்களூரில் வேலை பார்த்து வந்த திருச்சியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப என்ஜினியரும் ஒருவரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். அவரது வயது 31 என்றும், அவர் பெங்களூரிலுள்ள அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் லேக்சைடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மாலை மூச்சு திணறல் அதிகமாகி மரணடைந்தார். இதையடுத்து கர்நாடகாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் முதல் பலி...
இந்நிலையில் நேற்று இரவு 25 வயதான வாலிபர் ஒருவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் மரணமடைந்தார். இது ஆந்திர மாநிலத்தில் பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ள முதல் பலி. இவரை தொடர்ந்து கார்பரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தந்த 35 வயது பெண் ஒருவரும் பலியாகியுள்ளார்.
இந்தியாவில் 107 பேர்...
உலக அளவில் இந்த நோய் நேற்று வரை சுமார் 3 ஆயிரத்து 049 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 644 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.