ராகுல் வருகை தமிழ்ச் சமூகத்திற்கு அவமானம் - இளந்தமிழர் இயக்கம்
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த ராகுல் காந்தி வருகை தந்திருப்பது, தமிழ்ச் சமூகத்திற்கு வரலாற்று அவமானம் என்று இளந்தமிழர் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை..
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி கட்சியை பலப்படுத்தும் எண்ணத்தோடு தமிழ்நாடு வந்திருக்கிறார்.
ஈழத்தில் நம் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் சிங்கள அரசால் குண்டு வீசிக் கொல்லப்பட்டும்; பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டும் உள்ளனர்.
நூற்றாண்டு காணாத வரலாற்று சோகத்தைத் தாங்கியபடியும், தங்கள் இனத்தின் ஒரு பகுதி மக்களை இழந்தும் தமிழகம் சோகத்தில் பரிதவித்து நிற்கிறது.
போர் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, 3 லட்சம் மக்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள்ளும் மின்சார வேலிகளுக்குள்ளும் சிறைபட்டுக் கிடக்கிறார்கள். முகாமிற்குள் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
போருக்கு உதவியது மட்டுமின்றி, அப்போர் குறித்த விசாரணைக்குக் கூட இந்திய அரசு, ஐ.நா. சபைக்கு சென்று தடை போட்டதை எந்தத் தமிழனும் மறக்க மாட்டான்.
சிங்கள அரசின் இந்த அழிவு நடவடிக்கைகள் அனைத்திற்கும் உறுதுணையாக நின்று, ஆயுதங்களும் நிதியும் வழங்கியது இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சி. இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகத் தான் ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இணை அமைச்சர் பல்லம் ராஜூ உட்பட பலரும் இதனை உறுதிப்படுத்தினர்.
அண்மையில் கூட என்.டி.டி.வி. பாதுகாப்புப் பிரிவிற்கான ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே எழுதிய சிறீலங்கா: போரிலிருந்து சமாதானம் என்ற அவரது நூலில் இந்தியா வழங்கிய அனைத்து உதவிகளையும் பட்டியலிட்டு எழுதியுள்ளார்.
இவ்வாறு ஈழத்தமிழர்களை அழிக்க முழுமனதுடன் உதவிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, அக்கொலைகாரக் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்தும் எண்ணத்தோடு தமிழகம் வந்திருப்பது, தமிழினத்திற்கு அவமானம் தரக்கூடிய செயலாகும்.
ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சிக்கும் தமிழ்நாட்டில் பாதுகாவலராக உள்ள தமிழக முதல்வர் கருணாநிதியையும், இந்த இனத்தின் ஒரு பகுதி மக்களை கொன்றழித்தோமே என்ற குற்றவுணர்வு சிறிதும் இன்றி, அக்கட்சியை, தமிழ் இனத்தின் தாயகத்திலேயே பலப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிற காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகைக்கு வெறும் சம்பிரதாய எதிர்ப்புகள் மட்டும் போதாது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை தமிழகத்தில் முடக்கி, அக்கட்சி செயல்பட முடியாதுவாறு பல்வேறு வழிகளிலும் போராடுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
அந்நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளந்தமிழர் இயக்கம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துப் பரப்பல்களையும், இயக்கங்களையும் முன்னின்று நடத்தும்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப்புரைகளுக்கு மையமாக இளந்தமிழர் இயக்கம் நடத்தி வரும் www.defeatcongress.com இணையதளம், இனி புதிய வீரியத்துடன் செயல்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று தந்தைப் பெரியார் கூறினார். அவரது நோக்கங்களை அவரது பேரன்களாகிய நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications