அண்ணன் மான்கறி.. தம்பி தங்கபஸ்பம்!
சென்னை: மான்கறி வைத்தியம் செய்வதாகக் கூறி ஏமாற்றி வந்த போலி ஆயுர்வேத மருத்துவர் விய்குமாரின் தம்பி ஜெயக்குமார் தங்கபஸ்ப வைத்தியம் என்று கூறி மோசடி செய்து பிடிபட்டுள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
கேரளத்தைச் சேர்ந்தவரான விஜய்குமார் மைலாப்பூரில் திருவாங்கூர் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வந்தார். மான்கறி வைத்தியம் செய்வதாக கூறி அன்றாடம்காய்ச்சி முதல் பணக்காரர்கள் வரை அனைவரிடமும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட இவர் மீது இதுவரை 200 புகார்கள் வந்துள்ளன.
இவரிடம் சிகிச்சைக்கு சென்ற யாருக்கும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். இவர்களைப் போல் வேறு யாராவது போலி மருத்துவம் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
விஜய்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்வது பற்றி பரிசீலித்து வருகிறோம் என்றார்.
தங்கபஸ்ப மோசடி-தம்பியும் பிடிபட்டார்:
இதற்கிடையே கோவையில் மனநோயாளிகளுக்கு தங்கபஸ்ப சிகிச்சை அளிப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்து வந்த விஜய்ரகுமாரின் தம்பி ஜெயக்குமாரும் (51) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை ரோட்டில் வசித்து வந்த ஜெயக்குமார் சித்தா படித்துள்ளதாகக் கூறி பல ஆண்டுகளாக கோவைப்புதூரில் மருத்துவமனை நடத்தி வந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை என்று கூறி ஏமாற்றி வந்தார்.
இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில், மனநோய்க்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி ஜெயக்குமார் ரூ.1.5 லட்சத்தை தங்களிடம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும், அவர் சிகிச்சை அளித்ததில் நோய் குணமாகவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து ஜெயக்குமார் அந்த 2 பேரிடமும் சமாதானம் பேசி பணத்தைத் திரும்ப கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து திருப்பூரைச் சேர்ந்த விஜயலட்சுமி, கோவை போலீஸ் கமிஷனர் சிவனாண்டியிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய மகள் சுகாசினி தேவி (7) மூளைவளர்ச்சி குறைவாக இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஜெயக்குமாரிடம் சென்றதாகவும்,
அப்போது அவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய தங்கபஸ்பம் என்று கூறி 150 மில்லி கிராம் பொருளை கொடுத்தாகவும், அதற்கு ரூ.1.5 லட்சம் பணம் வாங்கியதாகவும், ஆனால் நோய் குணமாகவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையறிந்த ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டார். போலீசார் தேடுதல்வேட்டை நடத்தி அவரை சிங்காநல்லூரில் கைது செய்தனர்.
அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் தங்கபஸ்பம் என்ற பெயரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications