உலகத் தமிழ் மாநாடு திடீர் ஒத்திவைப்பு -ஜூனில் நடைபெறலாம்
கோவையில் ஜனவரி 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
ஆனால் உலகத் தமிழ் மாநாடு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விமர்சனமும் செய்திருந்தனர்.
ஈழத் தமிழர் பிரச்சினையை திசை திருப்பவே இந்த மாநாடு என இயக்குநர் சீமான் கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று உலகத் தமிழ் மாநாட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநாட்டுத் தேதியில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அறிஞர்கள் கட்டுரைகள் தயாரிக்க கால அவகாசம் தேவை என்று கோரியதால் மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரிக்குப் பதில் ஜூன் அல்லது ஜூலை மாதம் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழக துணைத் தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன்,
முனைவர் அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா, கவிப் பேரரசு வைரமுத்து,
பேராசிரியர் ராசராசேசுவரி, கவிஞர் கனிமொழி, முனைவர் மா.நன்னன், கவிக்கோ அப்துல் ரகுமான், முனைவர் சிலம்பொலி செல்லப்பன், கவிவேந்தர் கா.வேழவேந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, து.ரவிக்குமார் எம்.எல்.ஏ., முனைவர் பொன். கோதண்டராமன், முனைவர் க.ப.அறவாணன், ஐராவதம் மகாதேவன், முத்துக் குமாரசுவாமி, முனைவர் சுப்பராயலு ஆகியோர் பங்கேற்றனர்.