இலங்கை தூதரின் ஆணவ பேச்சு - உடனே வெளியேற்ற தலைவர்கள் கோரிக்கை
சென்னை: இலங்கை துணை தூதரின் ஆணவ பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. அவரை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை துணை தூதரகத்தில் இருக்கும் இலங்கையின் கிருஷ்ணமூர்த்தி உண்மைகளை மறைத்து, இந்திய மக்களையும், பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் அவமதிக்கக்கூடிய முறையில் ஆணவமான பேசியுள்ளார். அகம்பாவமாக, அவமதிக்கும் வகையில் அறிக்கை வருவது இது முதல் முறை அல்ல.
இலங்கையில் பிறந்த தமிழர்களின் மனித உரிமைகள் அனைத்தையும் அழித்து, உயிர், உடமைகளையும் பறித்து வரும் மக்கள் விரோத இலங்கை அரசின் பிரதிநிதி இந்திய மண்ணில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களையும் இழித்துரைத்துள்ளது, கடும் கண்டனத்திற்குரியது.
காட்டுமிராண்டி அரசு...
அவரை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இலங்கையிலுள்ள முகாம்கள், மிருகக் கண்காட்சி சாலை அல்ல என்று வர்ணித்திருப்பது அந்த நாடு உலக மக்களின் கருத்தை மதிக்க மறுக்கும் காட்டுமிராண்டி அரசு என்பதை காட்டுகிறது.
இலங்கை அரசு அப்பாவி தமிழர்களை சித்திரவதை கூடங்களில் அடைத்திருப்பது அடிப்படை மனித உரிமைகளை மீறிய மிருகச்செயல்.
பேச இடம் கொடுத்தது தவறு...
இந்திய மீனவர்கள் சுடப்படுவதும், கடத்தி செல்லப்படுவதும் பல ஆண்டுகளாக நடந்து வரும் கொடுமை. இதை இந்திய மத்திய, மாநில அரசுகளும் அறியும். இதுவரை 400க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய அரசு இலங்கையிடம் கெஞ்சுவதை கைவிட்டு மீனவர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு, இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட கொடையாசகம் கொடுக்கப்பட்ட பகுதி. கொடைதந்த நாட்டை எச்சரிப்பதும், உங்களுக்கு உரிமை இல்லை என இந்திய மண்ணிலிருந்து பேசவும் இடம் தந்திருப்பதே பெரும் தவறாகும்.
எனவே மீனவர்களை காக்கவும், கச்சத்தீவில் உரிமைகளை மீட்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் வற்புறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கடுமையாக கண்டிக்க வேண்டும்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி முள்கம்பி வேலி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விலங்குகள் போல் சித்தரித்துப் பேசிய துணைத்தூதரை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக மீனவர்களை இலங்கை தாக்கவில்லை. கச்சத்தீவு முற்று முழுதாக இலங்கைக்கு சொந்தமான பகுதி. தமிழக மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க உரிமையில்லை. இலங்கை கடல் எல்லைக்குள் வந்தால் கைது செய்வோம் என்று கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் அனுமதித்து இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. இதனை மறைத்து, உள்நோக்கத்துடன் பேசியுள்ள துணைத்தூதரை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய, இலங்கை கடல் எல்லை மற்றும் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கூறி இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள இலங்கை துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை இந்திய அரசு மிக கடுமையாக கண்டிக்க வேண்டும்.
இந்திய அரசு அவரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
சுய மரியாதையை காப்பாற்றுங்கள்...
திராவிடர் கழக தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல்வேறு வகையில் இலங்கை அரசு இந்தியாவை அவமானப்படுத்தி வருகிறது. இப்போது ஒரு துணை தூதுவரே ஏளனமும், கேலியும் செய்யும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது.
இந்திய அரசு இலங்கை துணை தூதுவரை உடனே வெளியேற்ற வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.
நாம் நீண்ட காலமாக வற்புறுத்தி வரும் இலங்கையில் இந்தியாவுக்கான தூதராக தமிழர் ஒருவரை நியமிக்கவேண்டும். இதுதான் சரியான பதிலடியாக கூட இருக்கமுடியும் என அறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.