உயிருடன் உள்ள மாணவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சிதம்பரம்
விருதுநகர்: கல்விக் கடன் வழங்கும் விழாவில், உயிருடன் இருக்கும் மாணவர் ஒருவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அஞ்சலி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் கல்விக் கடன் மற்றும் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் விழா தமிழக அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் ஏழை மாணவர்கள் படும் கஷ்டம் குறித்து திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியும், தென்காசி மக்களவை உறுப்பினர் லிங்கமும் நீண்ட பட்டியலிட்டனர்.
இதனால், கல்விக் கடன் கிடைக் காததால் திருவில்லிபுத்தூர் அருகே செல்லத்துரை என்ற மாணவர் தீக்குளித்தார் என்ற சம்பவத்தையும் சுட்டிக் காட்டிப் பேசினர்.
இதையடுத்துப் பேசிய. சிதம்பரம், ஒரு உதாரணத்தை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் குற்றம் சாட்டக் கூடாது. தீக்குளித்த மாணவர் செல்லத்துரைக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.
ஆனால் தீக்குளித்த செல்லத்துரை உயிரிழக்கவில்லை. மாறாக உயிர் பிழைத்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு ரூ.15 கோடி வரையிலான கல்விக் கடன்களை வழங்கி அவர் பேசுகையில்,
ஒரு மாநிலம் பல துறைகளிலும் முன்னேற்றம் அடைவது அந்த மாநிலத்தில் ஏற்படும் கல்வி வளர்ச்சியை வைத்துதான். அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜர் கல்விக் கண் திறந்து வைத்து கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தியதால்தான் தமிழகம் பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.
அதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களும் கல்வி வளர்ச்சிக்காக வழி வகுத்தார்கள். அதிலும் குறிப்பாக, முதல்வர் கருணாநிதி கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீதமாக உள்ளது. இது அனைத்து மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியின் சராசரிதான். எல்லா மாநிலங்களிலும் 9 சதவீத வளர்ச்சி ஏற்படுவதில்லை.
தமிழகம் போன்ற மாநிலங்களில் 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம். சில மாநிலங்களில் 9 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கலாம்.
கல்வி வாய்ப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில்தான் பொருளாதார வளர்ச்சியும் அதிகமாக உள்ளது. தமிழகம், கர்நாடகம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில்தான் கல்வி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் கல்வி வளர்ச்சி அதிகமாக இல்லை. அதனால்தான் அங்கு தீவிரவாத செயல்கள் அதிகமாக உள்ளன.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழக அரசும், மத்திய அரசும் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. பிற மாநிலங்களில் ஒத்துழைப்பு இல்லை.
தமிழகத்தில் மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.5,332 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நிலம் வைத்திருப்பவர்கள், சொத்து வைத்திருப்பவர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கடன் பெற்று வந்தார்கள். தற்போது தகுதி உள்ள மாணவருக்கு அந்த மாணவரின் கையெழுத்தை மட்டும் பெற்றுக்கொண்டு கடனுதவி வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சொத்து ஜாமீனோ, 3ம் நபர் ஜாமீனோ பெற வேண்டிய அவசியம் இல்லை. அந்த மாணவர் அல்லது மாணவியின் கையெழுத்தோடு அவர்களது தாய் அல்லது தந்தையரின் கையெழுத்தை மட்டும் பெற்றுக்கொண்டால் போதும்.
97 விழுக்காடு வங்கி மேலாளர்கள் இம்மாதிரியான ஏழை எளிய மாணவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குகிறார்கள். ஒன்றிரண்டு வங்கி மேலாளர்கள் கேளாச்செவி படைத்தவர்களாகவே உள்ளார்கள். அவர்கள்தான் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை. இது மத்திய அரசின் வேண்டுகோள் அல்ல. மத்திய அரசின் உத்தரவு. இந்த உத்தரவை வங்கி அதிகாரிகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.