ஸ்வைன்-ஜிப்மரில் ஊராட்சி தலைவர் பலி
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். இவரையும் சேர்த்து ஜிப்மரில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆகியுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சதீஷ். வயது 31. கடும் காய்ச்சல், சளி காரணமாக விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். உயிரிழந்த சதீஷ் சொந்த ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்து வந்தவர். சிறப்பாக செயல்பட்டு வநத்வர். சிறந்த ஊராட்சித் தலைவருக்கான குடியரசுத் தலைவரின் விருதும் பெற்றுள்ளார்.
இவரையும் சேர்த்து இதுவரை ஜிப்மரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெண் பலி..
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சின்னமுக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகலா என்ற 26 வயதுப் பெண், பன்றிக் காய்சச்ல் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த இருவரையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, ஜிப்மர் மாணவர் உள்பட 3 பேர் பன்றிக் காய்ச்சல் காரணமாக தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.