மின் வாரிய ஊழியர்களுக்கு 40% ஊதிய உயர்வு
சென்னை: தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடன் நடந்தது. இதில் 18 தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
4 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில், இன்று சுமூக முடிவு ஏற்பட்டது.
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,
மின்வாரிய ஊழியர்களி்ன் ஊதியம் 40 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.1,400 முதல் அதிகபட்சமாக ரூ. 19,510 வரை ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைக்கும்.
இதன் மூலம் 76,000 நிரந்தர ஊழியர்கள், 10,000 ஒபந்ததத் தொழிலாளர்கள், 84,000 ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
சம்பள உயர்வுடன் 2 வருடத்துக்கான நிலுவைத் தொகையும் (அரியர்ஸ்) வழங்கப்படும். 1.12.2007 முதல் சம்பளம் கணக்கிட்டு நிலுவைத் தொகை வழங்கப்படும்.
நிலுவைத் தொகையை 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினக்கூலி ரூ.70ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்படும். இது 1.12.2009 முதல் அமலுக்கு வரும் என்றார்.
ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியானதும், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் முதல்வர் கருணாநிதியை வாழ்த்தி கோஷமிட்டபடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்:
இந் நிலையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் இணைப்புச் சங்கமான தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பாக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் அருகில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.
மழை பெய்தால், உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக் கொள்ளாமல் குடை பிடித்து உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறியுள்ளார்.