திரைதுறை மையமாக தமிழகம் உருவாக வேண்டும்- கருணாநிதி
சென்னை: இந்திய திரைப்படத்துறையின் மையமாக தமிழகம் உருவாக வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
அகில இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் கேளிக்கை தொழில் வர்த்தக மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய கருணாநிதி,
தமிழ் சினிமாவில் 28 வயதில் இருந்து பங்கு பெற்று வருகிறேன். இப்போது எனக்கு 86 வயது. நான் உங்களில் ஒரு அங்கம். இந்த கருத்தரங்கில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது கூட நான் இரண்டு படங்களுக்கு கதை வசனம் எழுதுகிறேன். அதில் கிடைத்த பணத்தை அருந்ததியர் மாணவ- மாணவிகளுக்கும் ஏழை களுக்கும் சினிமா துறையில் நலிந்தவர்களுக்கும் வழங்கி வருகிறேன். அதே போல் சினிமா துறையை சேர்ந்தவர்களும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை எளியோருக்கு வழங்கி உதவ வேண்டும்.
தமிழ் சினிமா நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. சினிமாவை திமுக சமூக சீர்திருத்துக்கு பயன்படுத்தியது. தமிழ் நாடகத்துறை திராவிட இயக்க வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி உள்ளது.
திமுக அரசு சினிமா துறைக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. தமிழக ஸ்டூடியோக்கள் உலக தரம் வாய்ந்தவை.
1989ம் ஆண்டில் 54 சதவீதமாக இருந்த கேளிக்கை வரியை நாற்பது சதவீதமாக குறைத்தோம். 98ல் 30 சதவீதமாகவும், 2008ல் 25 சதவீதமாகவும் குறைத்தோம்.
தமிழ் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கும் வரிவிலக்கு அளித்தோம். விருதுகள் கூட குழு அமைக்கப்பட்டு பாரபட்சமின்றி வழங்குகிறோம். தமிழக அரசால் சினிமா தொழில் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாத்துறை வளர்ச்சி 12.5 சதவீதமாக இருக்கும் என்கிறார்கள். உலகளவில் ஒப்பிடும் போது தமிழ் சினிமா நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. சோனி பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ் இரண்டும் சென்னையை மையமாக கொண்டு சினிமா வர்த்தகத்தை தொடங்கி உள்ளன.
திரைப்பட நகரத்தை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்திய திரைப்படத்துறையின் மையமாக தமிழகம் உருவாக வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றார்.