பெரியாறு அணையையும் தாரை வார்க்கப் போகிறார் கருணாநிதி - விஜயகாந்த்
சென்னை: பல்லாண்டு வாழ்வதல்ல முக்கியம், வாழும்போது என்ன செய்தோம் என்பது தான் முக்கியம் என்று முதல்வர் எழுதுகிறார். 72-லேயே காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். 74-ல் கச்சத்தீவை தாரை வார்த்தார். இப்போது முல்லைப் பெரியாறையும் தாரை வார்க்கப் போகிறார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் சேரும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அப்போது விஜயகாந்த் பேசுகையில்,
பல்லாண்டு வாழ்வதல்ல முக்கியம், வாழும்போது என்ன செய்தோம் என்பது தான் முக்கியம் என்று முதல்-அமைச்சர் எழுதுகிறார். 72-லேயே காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். 74-ல் கச்சத்தீவை தாரை வார்த்தார். தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுத்த தேவேகவுடா, பிரதமராக வந்த போது அவருக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது ஏன்?
நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம்...
நான் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் குறை சொல்கிறார்கள் என்று கூறுகிறார். நல்லாட்சி தான் செய்கிறீர்கள், இலவச டி.வி., ஒரு ரூபாய்க்கு அரிசி, கியாஸ் அடுப்பு எல்லாம் தருகிறீர்கள். தனித்து போட்டியிடுங்களேன். காசு கொடுக்காமல் திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் போட்டியிடுங்கள் பார்க்கலாம். நாங்கள் இந்த தேர்தல்களில் தனியாகத்தான் போட்டியிடப் போகிறோம்.
இலங்கை அகதிகள் முகாம்கள் 83-ல் இருந்து இருக்கிறது. இன்று ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறார். இவ்வளவு நாள் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? பத்மநாபன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அன்றைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவிலையே?
காப்பீட்டு திட்டத்திற்கு இந்த வருடத்திற்கு ரூ.517 கோடி ஒதுக்கியிருப்பதாக கூறுகிறார். அந்த பணத்தை இங்கிருக்கும் மருத்துவமனைகளுக்கு செலவழித்தால் நம் தேவைகள் எல்லாம் நிறைவேறும்.
3 ஆயிரம், 4 ஆயிரம் பேர் என்று இங்கு வந்து இணையும் அளவுக்கு தே.மு.தி.க. வளர்ந்திருக்கிறது.
அதிமுகவுக்கு ஏன் காவடி தூக்க வேண்டும்...
அ.தி.மு.க.வுடன் கூட்டு சேருவீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் 2 முறை ஆட்சியில் இருந்தார்களே, அப்போது மக்களுக்கு என்ன செய்தார்கள். அவர்களுக்கு ஏன் நாங்கள் காவடி தூக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. 2 கட்சிகளும் பிடிக்கவில்லை என்று தானே இங்கு வந்து சேருகிறார்கள். ஒரு நாள், ஒரு பொழுது நான் நிச்சயம் வருவேன். இந்த மக்களுக்காக நல்லது செய்வேன்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கட்சி பணத்தையோ, சொந்த பணத்தையோ அவர்கள் வழங்கவில்லை. மக்களின் வரிப்பணத்தை தான் வழங்குகிறார்கள்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்கிறார். சுப்ரீம் கோர்ட்டு 142 அடி தேக்கலாம் என்று உத்தரவு வழங்கிய போது, அந்த உத்தரவை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்திருக்க வேண்டும். அதற்கு போராடவில்லை. முல்லைப் பெரியாறையும் தாரை வார்க்கப் போகிறார்.
தரம் பார்த்து வாக்களியுங்கள்...
மக்கள் ஆதரவு எனக்கு பெருகிவருகிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் தரும் தைரியத்தில் தான் நான் தனித்து போட்டியிடுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஒரு தொகுதிக்கு வாக்காளர்கள் 10 கோடி பெறுகிறார்கள் என்றால், உங்கள் தொகுதியில் ரூ.100 கோடிக்கான பணிகளை இழக்கிறீர்கள்.
காய்கறிகளையும், மீனையும் தரமானதாக பார்த்து வாங்கும் பெண்கள் வாக்களிக்கும் போதும் தரம் பார்த்து வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.