ஆரம்ப முதலீடுகளுக்கு அருமையான களமாகத் திகழும் தமிழகம்!
இந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் துவங்கப்பட்ட அல்லது விரிவாக்கம் செய்யப்பட்ட 155 நிறுவனங்களுக்கு ஆரம்ப முதலீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த வருமானத்தில் அதிக பங்களிப்பைத் தரும் டாப் 5 மாநிலங்களுள் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது. மற்ற மாநிலங்களை விட தொழில் முனைவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் மிக சாதகமான சூழல் உள்ள மாநிலம் தமிழகம்தான் என்கிறது தேசிய அளவிலான கணக்கெடுப்புகள்.
முன்பெல்லாம், தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் என்றாலே ஒரு பழமைவாத இமேஜ் இருந்தது. ஆனால் இப்போது தென் மாநிலங்களில்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள்தான் ஆரம்ப முதலீடுகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, தொழில் நிபுணத்துவம் பெற்றவர்களையும அதிக அளவு பணியில் அமர்த்துகிறார்கள்.
இதனால் ஆரம்ப முதலீட்டு அமைப்பான விசி சர்க்கிள், சென்னையில் தனது முதலீட்டு கருத்தரங்கை நடத்தியது.
இந்த ஒரு நாள் கருத்தரங்கில், தொழில் துறையில் முதலீடுகள், எதிர்கால வாய்ப்புகள் மற்றும் விரைந்த முடிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த 5 ஆண்டுகளில் 155 நிறுவனங்களுக்கு 2.5 பில்லியன் டாலர் அளவுக்கு ஆரம்ப முதலீடு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஐடி நிறுவனங்கள். ஹெல்த்கேர், டிஜிட்டல் மீடியா, பொறியியல் துறைகளும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.
வங்கித் துறைக்கு மட்டும் 697 மில்லியன் டாலர் ஆரம்ப முதலீடாக வழங்கப்பட்டுள்ளது. சுகாதார நிறுவனங்கள் 100 மில்லியன் டாலர் வரை பெற்றுள்ளன.
சிவசங்கரனின் சிவா வென்சர்ஸ் மட்டும் 230 மில்லியன் டாலரை ஆரம்ப நிதியாக எஸ் டெல் எனும் புதிய டெலிகாம் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாம்பிள்தான். இதுபோல ஸ்ரீராம் ஹோல்டிங்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனங்களும் பல முதலீடுகளைச் செய்துள்ளன.
இந்த நிலை வரும் ஆண்டுகளில் மேலும் ஆரோக்கியமான சூழலை நோக்கிச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது விசி சர்க்கிள்.