சந்திரசேகர ராவ் கைது- தெலுங்கானாவில் கலவரம்

Subscribe to Oneindia Tamil

Chandrasekara Rao
கரீம்நகர் (ஆந்திரா): தனி தெலுங்கானா கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க புறப்பட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவை போலீசார் வழியிலேயே மடக்கி கைது செய்தனர்.

இதனால் கரீம் நகர் பகுதியில் கலவரம் வெடித்தது. பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, ஏராளமான போலீசார் கரீம் நகர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவுகிறது.

ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சந்திரசேகர ராவ் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் பதவி ராஜினாமா, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மற்றும் பலவகையான போராட்டங்கள் நடத்தியும் இவ்விஷயத்தில் மத்திய அரசு மசியவில்லை.

இதனால், இன்று தனது சொந்த ஊரான கரீம்நகர் மாவட்டம் சித்திப்பேட்டையில் 30 ஆயிரம் தொண்டர்களுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு சந்திரசேகர ராவை கைது செய்ய 300 பேர் கொண்ட போலீஸ் படை கரீம் நகருக்கு அனுப்பப்பட்டது. இதையறிந்ததும் தெலுங்கானா கட்சி தொண்டர்கள் 3 ஆயிரம் பேர் பெட்ரோல் குண்டுகளுடன் சந்திரசேகர ராவ் வீடு அருகே திரண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மிளகாய் பொடி பாக்கெட்டுடன் வீட்டைச் சுற்றி அரணாக நின்றனர்.

வீட்டைச் சுற்றிலும் அதிக அளவில் தொண்டர்கள் நின்று கொண்டிருந்ததால், கலவரம் வெடிக்கும் ஆபாயம் ஏற்பட்டது. இதனால் இரவில் கைது செய்வதை போலீசார் தவிர்த்தனர்.

இதற்கிடையே, சந்திரசேகர ராவ் திட்டமிட்டப்படி இன்று காலை 8 மணிக்கு கரீம் நகரில் இருந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் சித்திப்பேட்டைக்கு காரில் புறப்பட்டார்.

அவரை வழியிலேயே கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கே 500க்கும் மேற்பட்ட போலீசார் 75க்கும் மேற்பட்ட வாகனங்களில் காட்டுப் பகுதிகளில் காத்திருந்தனர்.

சந்திரசேகர ராவ், தன்னுடன் வந்த 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழ தொண்டர்களுடன் சென்று கொண்டிருந்தார். போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு தொண்டர்களின் வாகனங்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர்.

கடைசியில் சந்திரசேகர ராவின் கார் தனிமைப்படுத்தப்பட்டது. அவரது காரை போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்தது. பின்னர், சந்திரசேகர ராவை கைது செய்து வாரங்கல் மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

சந்திரசேகர ராவ் கைதானதை அறிந்ததும் சித்திப் பேட்டை, கரீம்நகர் பகுதியில் கலவரம் வெடித்தது. தொண்டர்கள், சித்திப்பேட்டை வழியாக வந்த 4 அரசு பஸ்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

போலீசார் அவர்களை தடியடி நடத்தினர். கரீம்நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

கரீம் நகரில் உள்ள சந்திர சேகரராவ் வீடு அருகே 3 டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரீம்நகரில் கலவரம் மேலும் பரவாமல் தடுக்க 100க்கும் மேற்பட்ட தெலுங்கானா கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சந்திரசேகரராவ் மகனும் எம்.எல்.ஏ.வுமான தாரக்ராமாராவ் கைது செய்யப்பட்டார்.

சந்திரசேகரராவ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் மற்றும் காக தீயா பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உள்ள மேஜை, நாற்காலிகள், கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிஜாமாபாத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கிடையே, தன்னை கைது செய்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன். சிறையில் இருந்தபடியே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவேன் என சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

இதனால், தெலுங்கானா பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+