மருத்துவர்கள் 'அன்பளிப்பு' பெறுவதை தடுக்க புதிய விதிமுறைகள்!
மருந்துகளின் விற்பனையை பெருக்குவதற்கு மருந்து நிறுவனங்களுக்கு மருத்துவர்களின் ஒத்துழைப்பு வெகுவாக தேவைப் படுகிறது.
மருந்தியல் துறை பற்றிய அடிப்படை அறிவு இல்லாத ஏராளமான நோயாளிகள் மருத்துவரின் சொல்லே மந்திரம் என நம்ப வேண்டிய நிலை உள்ளது.
பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு, பல்வேறு காரணங்களையும் பின் விளைவுகளை ஆராய்ந்து மருந்துகளை எழுதித் தருவது மருத்துவர்களின் பணி.
சில மருந்துகளை பிரத்தியேக காரணங்களுக்காக, குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை வாங்கச் சொல்லி மருத்துவர்கள் சிலர் நேர்மையான ஆலோசனைகளை கூறுவார்கள்.
இதனால், மருந்துகளின் பெயருக்கும், தயாரிப்பு நிறுவனப் பெயருக்கும் வித்தியாசம் தெரியாமல் போனாலும் மருத்துவர் சொல்வதை தேடிப் பிடித்து வாங்கும் வழக்கம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
இந்த சூழ்நிலையை பல மருந்து நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. மருத்துவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும், 'சாம்பிள்' என்ற பெயரில் காஸ்ட்லி மருந்துகளையும் பல்வேறு உபகரணங்களையும் இலவசமாக வழங்குவதுண்டு.
இவற்றை நோயாளிகளிடம் விற்றுவிடும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். மருந்து நிறுவனங்களின் 'கவனிப்பு'க்கு ஒத்துழைக்கும் மருத்துவர்கள் நோயாளிக்களுக்கு குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது.
இந்த போக்கினால் நோயாளிகளுக்கு தரம் குறைந்த மருந்துகளை பரிந்துரைக்கப்படும் அபாயம் இருப்பதாக சமூக, மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மருந்துகளும், மருந்துவர்களும் சட்டப்படி விளம்பரத்தில் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், வர்த்தகமயமாகிவிட்ட மருத்துவத் துறையினர் இதுபோல மறைமுகமாகவும், நுணுக்கமாகவும் விளம்பர முயற்சிகளில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த 'அன்பளிப்பு'களுக்கு முடிவு கட்ட மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. மருத்துவர்கள் மருந்து நிறுவனங்களிடமிருந்து பரிசு வாங்குவதற்கு கடந்த ஜனவரியில் தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி அன்பளிப்பு அளிக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் தண்டனை அளிப்பது குறித்து மருத்துவக் கவுன்சில் கூடி விவாதித்து வந்தது. எந்த வகையான தண்டனை அளிப்பது என்பதை ஆய்வு செய்து அதற்கான திட்டைத்தை சுகாதாரத்துறை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.
அதன்படி ரூ. 1000 முதல் ரூ. 5000 வரையான மதிப்பில் பரிசு பெற்றால் கண்டித்து எச்சரிக்கப்படுவார்.
ரூ. 5000 மேல் ரூ. 10,000 பரிசு பெற்றால் அவரது மருத்துவ கவுன்சிலில் அவரது பதிவு 3 மாதத்துக்கு ரத்து (சஸ்பெண்ட்) செய்யப்படும். 3 மாதத்துக்கு அவர் மருத்துவ தொழில் செய்ய முடியாது.
ரூ. 50 ஆயிரம் வரை 6 மாதம் பதிவு ரத்து, ரூ. 1 லட்சம் வரை ஓராண்டுக்கு பதிவு ரத்து, ரூ. 1 லட்சத்துக்கு மேல் ஓராண்டுக்கு மேல் பதிவு ரத்து என்ற தண்டனை முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.
ஏற்கெனவே தண்டனை பெற்றவர் மீண்டும் மீண்டும் தவறு செய்தால் அவரது மருத்துவ பதிவை நிரந்தரமாக ரத்து செய்யவும் மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது.
பரிசு பெறும் மருத்துவர்கள் பற்றி புகார் தெரிவிப்பதற்காக இ.மெயில் மற்றும் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் கேட்டன் தேசாய் தெரிவித்தார்.