சென்னை ஹைகோர்ட்-கருணாநிதி வருகைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்துக்கு எதிரே உள்ள மைதானத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வரும் 25ம் தேதி காலை திறப்பு விழா நடக்கவுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதியின் வருகைக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:
சிலை திறப்பு விழாவில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்.
கடந்த 19.2.2009 அன்று நடந்த வக்கீல்கள்-போலீசார் மோதலுக்கு காரணமாக இருந்த போலீஸ் துறைக்கு பொறுப்பேற்று இருக்கும் முதல்வர் கருணாநிதிக்கு இந்த விழாவில் வரவேற்பு அளிக்கக்கூடாது.
இந்த மோதலுக்கு காரணமான 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முதல்வர் கருணாநிதி கீழ்படியவில்லை. எனவே, அவர் வருவதாக இருந்தால் 200க்கும் மேற்பட்ட வக்கீல்களும், மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இணைந்து கறுப்பு கொடி காட்டுவோம்.
மேலும், நீதிபதிகளின் உத்தரவை பின்பற்ற தவறிய முதல்வர் கருணாநிதி இருக்கும் மேடையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாரும் அமரக்கூடாது.
இவ்வாறு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் வழக்கறிஞர் ஏ.ஆர்.எம்பெருமாள் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதியை இந்த விழாவுக்கு நீதிபதிகள் அழைக்க கூடாது. அப்படி அழைத்தால் 23ம் தேதியில் இருந்து நான் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.