தமிழகத்தில் மேலும் 10 புதிய தொழிற்பேட்டைகள் - தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் 10 மேலும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி கூறியது-
"தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாலையப்பட்டி கிராமத்தில் 103 ஏக்கரிலும், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் 20 ஏக்கரிலும், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள மணவாசியில் 121 ஏக்கரிலும், வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டத்தில் உள்ள அல்லாலசேரி, நாகலேரி கிராமங்களில் 40 ஏக்கர் பரப்பளவிலும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கோயம்புத்தூரில் உள்ள மயிலேரிபாளையம் கிராமத்தில் 22 ஏக்கரிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவேரிராஜபுரம் கிராமத்தில் 200 ஏக்கரிலும், ஏனம்பாக்கம் கிராமத்தில் 200 ஏக்கரிலும், விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தில் 60 ஏக்கரிலும், விழுப்புரம் மாவட்டம் பட்டணம் கிராமத்தில் 103 ஏக்கரிலும், திருநெல்வேலி பொன்னாகுடியில் 96 ஏக்கர் பரப்பளவிலும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
15 பொது வசதி மையங்கள்
சிறு, குறு தொழில் நிறுவன குழுமங்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 15 பொது வசதி மையங்கள் அமைக்கப்படும். அரிசி ஆலை, தானியங்கி உதிரி பாகங்கள் உற்பத்தி, சித்த மருந்துப் பொருள்கள் தயாரிப்பு, ஆயத்த ஆடை உற்பத்தி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ள குழுமங்கள் பயன்பெறும் வகையில் பொது வசதி மையங்கள் உருவாக்கப்படும். ரூ.89 கோடியில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்படும்.
மேலும் சிட்கோவில் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள், தொழிற்கூடங்களைப் பெறுவதற்கு இந்த நிதியாண்டு முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்படும்," என்றார் அமைச்சர்.