அமிதாப் வீட்டை முற்றுகையிட்டு நாளை போராட்டம்- சீமான்
இன்று அந்த செய்தி நாளிதழ், இணைய தளங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் மூலம் ஒரு இயக்கமாகவே உருவெடுத்துள்ளது.
வைகோ இதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். அடுத்த கட்டப் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறார். இலங்கையில் இந்த விழா நடைபெறாமல் தடுப்பது, தமிழரின் மனக்கொதிப்பைப் புரிய வைக்கும் ஒரு வழியாக தமிழ் உணர்வாளர்கள் கருதுகிறார்கள்.
இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளும் பிரதிநிதிகளும் இலங்கை அரசுடன் ஒத்துப் போகிற நிலை. தாயகத்தில் அதிகாரத்திலுள்ளவர்களோ ராஜபக்சேக்கு ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில், உணர்வைக் காட்ட கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியாக வேண்டியுள்ளதால், இந்த திரைப்பட விழா விஷயத்தில் தீவிரம் காட்டுகின்றன தமிழ் அமைப்புகள்.
அதற்கு தெரிந்தோ தெரியாமலோ முதல் சுழியைப் போட்டிருப்பவர்கள் ரஜினி, கமல் போன்ற தமிழ்க் கலைஞர்களே. இவர்களின் அடியொற்றி விஜய், சூர்யா போன்ற இரண்டாம் நிலை நாயகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தக் கலைஞர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்க தலைவருமான சீமான்.
இதுகுறித்து நம்மிடம் அவர் கூறியதாவது:
தாயகத்தில் உள்ள தமிழ்க் கலைஞர்கள் இன்றைக்கு செய்திருக்கும் விஷயம் ஒரு தமிழனாக எனக்கு பெரும் ஆறுதலாக உள்ளது. கொழும்பில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் விஷயத்தில், யாரும் நிர்ப்பந்திக்காமல், தங்கள் உணர்வுகளை அவர்கள் காட்டியுள்ளனர். குறிப்பாக ரஜினி கமல் என்ற இருபெரும் கலைஞர்கள் நமது உணர்வுகளை மதித்துள்ள விதம், உலகெங்கும் வாழும் நமது தமிழ் உறவுகளுக்கு ஆறுதலாக உள்ளது.
இந்த உணர்வு அனைத்துக் கலைஞர்களுக்கும் வரவேண்டும். யார் எப்படிப் போனாலும் நமக்குக் கவலை இல்லை. நம் உணர்வைக் காட்டுவதில் நேர்மையாக இருப்போம். ராஜபக்சேயுடன் தாயகத் தமிழர்கள் கைகுலுக்குவது, முள்ளிவாய்க்காலில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் செத்த நம் உறவுகளுக்கு செய்கிற துரோகம்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு இலங்கையில் இருந்து மரணச் செய்தியாகத்தான் வந்து கொண்டிருந்தன. அங்கு தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.
ஏராளமான விடுதலைப் புலிகளும் ஆயிரக்கணக்கான மக்களும் தங்கள் தாய்மண்ணுக்காக உயிரைத் துறந்த கொடிய போர் முடிந்து ஓராண்டு முடிகிறது.
அந்த கொடிய நிகழ்வை, இலங்கை அதிபர் ராஜபக்சே கேளிக்கை நிகழ்ச்சியுடன் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கு இந்திய திரைக்கலைஞர்களையே துணைக்கு அழைத்துள்ளது எத்தனை கொடூர மனப்பான்மை?" என்றார் சீமான்.
இதற்கிடையே, அமிதாப் பச்சனுக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் நாளை மும்பையில் அமிதாப் பச்சன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த சீமானின் நாம் தமிழர் அமைப்பு திட்டமிட்டுள்ளதாம்