சொத்து மோசடி... திருமா தாயார் நீதிமன்றத்தில் மனு!
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் தனது சொத்தை மோசடியாக அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை அசோக்நகர் நூறடிசாலை முதல் அவென்யூவைச் சேர்ந்த பெரியம்மாள், சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனு:
அசோக்நகர் முதல் அவென்யூவில் உள்ள 3 கிரவுண்டு மற்றும் 840 சதுரஅடி இடத்தை மறைந்த பாலகிருஷ்ணனிடம் இருந்து வாங்கி 2006-ம் ஆண்டு பதிவு செய்தேன்.
ஆனால் இந்த சொத்தில், மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியைச் சேர்ந்த திட்டக்கவி ஆனந்த பத்மநாப மூர்த்தி, ஆந்திராவைச் சேர்ந்த கந்துகுரி சாய்பாபா, கந்துகுரி ராமசுப்பிரமணியம் ஆகியோர் வில்லங்கம் ஏற்படுத்தி வந்தனர். இந்த சொத்தை 1973-ம் ஆண்டு அன்று மறைந்த லட்சுமிதேவி எழுதி வைத்ததாக கூறினர்.
இதுசம்பந்தமாக கிண்டி வட்டாட்சியர் மற்றும் செயல்முறை நடுவர் ஆகியோர் விசாரணை நடத்தி 1991-ம் அன்று தீர்ப்பு வழங்கினர். அதில், இவர்கள் போலி ஆவணம் மூலம் பட்டா பெற்றுள்ளனர் என்றும் அதை பாலகிருஷ்ணனின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். மேலும், இந்த சொத்தில் பந்தா பாண்டியன் மற்றும் கணேசன் ஆகியோரும் உரிமை கோரினர். அவர்களும் போலி ஆவணங்கள் மூலமே உரிமை கோருவதாகவும் தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில் இந்த சொத்தைக் கேட்டு திட்டக்கவி ஆனந்த பத்மநாப மூர்த்தி கந்துகுரி சாய்பாபா, கந்துகுரி ராமசுப்பிரமணியன் ஆகியோர் சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 2004-ம் ஆண்டு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. எனவே அதை எதிர்த்து பாலகிருஷ்ணனின் வாரிசுகள், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பின்னர் இந்த சொத்து, வேதா அருண் நாகராஜனிடம் ரூ.5 லட்சத்துக்கு அடமானம் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதை விற்பதற்கு இவர்கள் 3 பேரும் முயற்சி மேற்கொண்டனர். இதுபற்றி அசோக்நகர் போலீசில் வேதா புகார் செய்தார். இதுபற்றி நடந்த விசாரணையில், எங்களுக்கு சாதகமாக 2007-ம் ஆண்டு வட்டாட்சியர் தீர்ப்பளித்தார்.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த சொத்தில் இருந்து வேதா மற்றும் வேறு நபர்கள் யாராகிலும் இருந்தால் அவர்களை வெளியேற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தள்ளுபடி ஆன பிறகு, நானும் வேதாவும் அந்த சொத்தில் இருந்து வெளியே வந்துவிட்டோம்.
போலி ஆவணங்களை நுழைத்தனர்
ஆனால் திட்டக்கவி பத்மநாப மூர்த்தி, கந்துகுரி ராமசுப்பிரமணியம், கந்துகுரி சாய்பாபா ஆகியோர் போலியான ஆவணங்களை கோர்ட்டுகளில் தாக்கல் செய்து, தீர்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இவர்களின் பொதுஅதிகார முகவரான சிவராம் பிரசாத்துக்கு வழங்கப்பட்ட பத்திரங்களில் இவர்களின் முகவரிகள் தவறாக உள்ளன.
லட்சுமிதேவியால் எழுதி வைக்கப்பட்ட உயில் மற்றும் பதிவு அலுவலகங்களில் உள்ள புத்தகங்களிலும் மோசடி செய்து போலி ஆவணங்களை நுழைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. வயது உள்ளிட்ட விவரங்களிலும் தவறான தகவல் தரப்பட்டு உள்ளது. பொது அதிகாரப் பத்திரத்தில் கைரேகை பதிவு செய்யப்படவில்லை. இவற்றை பரிசீலித்து மோசடி நபர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..." என்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்றத்தில்...
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியம்மாள் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "எனது சொத்து விஷயத்தில் நடந்த மோசடி பற்றி விசாரிப்பதற்கு 14-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனருக்கு மனு கொடுத்திருந்தேன்.
அது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் மாற்றப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்னை மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்..." என்று கூறியுள்ளார்.