தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று "வித்தாக விளங்கும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
அதில் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:
மொழி தான் மக்களின் பண்பாட்டையும், ஓர் இனத்தின் பண்பாட்டையும் கட்டமைக்கிறது. தாய்-தந்தை பேண் என்ற தனி மனித அறத்தையும், செல்வத்துப் பயனே ஈதல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் போன்ற சமூக அறத்தையும், உலகம் உண்ண உண் என்ற உலக அறத்தையும் மொழி நமக்கு கற்றுத் தருகிறது.
அதனால் தான் இதற்கெல்லாம் மொழி வித்தாக விளங்குகிறது என்று கூறுகிறோம்.
எல்லா அறத்திலும் மேன்மையான அறம் சமத்துவம் தான். நம் மாநாட்டின் குறிக்கோள் வரியும் கூட அதைத்தான் வலியுறுத்துகிறது. "பிறப்பொக்கும் எல்லோ உயிர்க்கும்'' என்ற குறிக்கோளை முதல்வர் ஆழ்ந்து சிந்தித்தே அமைத்திருக்கிறார்.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பது இந்த மாநாட்டின் குறிக்கோளாக முன்னிறுத்தப்பட்டுள்ளது. சமத்துவம் மறுக்கப்படும்போது போராட்டம் வெடிக்கிறது.
எங்கெல்லாம் சமத்துவம் மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடித்துள்ளன என்பதை உலக வரலாறுகள் கூறுகின்றன.
சமீபத்தில் விடுதலை அடைந்தது எரித்திரியா நாடு. அந்த மக்கள் பேசிய மொழியின் நூல்களை தீ வைத்துக் கொளுத்தியதால் அங்கு விடுதலைப் போராட்டம் வெடித்தது. அங்கே மொழிக்கு வைத்த தீ விடுதலைத் தீயாக மாறியது.
அதேப்போல 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தில் 97,000 தமிழ் நூல்களையும் அரிய ஓலைச் சுவடிகளையும் தீ வைத்து கொளுத்தினார்கள்.
வங்கதேசம் கூட மொழி அடிப்படையில் தான் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து விடுதலை பெற்றது. எனவே ஓர் இனத்தின் அடிப்படை வித்தாக விளங்கும் ஆற்றல் மொழிக்குத்தான் உண்டு.
இந்த மாநாடு மிகப்பெரிய தொடக்கம். இதனை அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களும் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த மாநாட்டுக்கு பிறகு தமிழர்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும். தாய் மொழியை போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை என்றார் சுப. வீரபாண்டியன்.