தமிழக மக்கள் மன நிலையை கேட்டறிந்த ராகுல் காந்தி
சென்னை : தமிழக அரசியல் கட்சிகள் சட்டசபைத் தேர்தலுக்கு எப்படித் தயாராகிறதோ தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி படு வேகமாக தயாராகி வருவது மட்டும் நன்றாகப் புரிகிறது. மீண்டும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர் நடத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டில்தான் முடிவுக்கு வருகிறது. ஆனால் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
திமுக தரப்பில் நாள்தோறும் வெளியாகும் அறிவிப்புகள், அந்தக் கட்சியின் தலைவர்கள் பேசும் பேச்சு ஆகியவற்றைப் பார்க்கும்போது தேர்தல் நெருங்கி வருவதாகவே தோன்றுகிறது.
அதிமுக பொதுச் செயலாளரும் ஊர் ஊராக தனது தலைமையில் கண்டனக் கூட்டம், ஆர்ப்பாட்டம் என கிளம்பியுள்ளார். கூட்டணியையும் பலப்படுத்த ஆரம்பித்துள்ளார். நீக்குப் போக்காக நடந்து வருகிற கட்சிகளை கூட்டணிக்கு வரவேற்கவும், வலுவான கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துப் போகவும் அவர் தயாராகி விட்டார்.
காங்கிரஸ் தனது கூட்டணிக்கு வரும் என்ற பெரும் நம்பிக்கையில் உள்ளார். தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மறுபக்கம் பாமகவோ, திமுகவுடன் ஒட்டிக் கொள்ள தயாராகி விட்டது. அந்த கோணத்தில்தான் தற்போது அவர்கள் நடை போட ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியும் சத்தம் போடாமல் பல வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் தேர்தல் தொடர்பான பூர்வாங்க வேலைகளை ராகுல் காந்தியே தனது கையில் எடுத்துக் கொண்டு காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார்.
டெல்லிக்கு தமிழக தலைவர்களை அதிரடியாக வரவழைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு தேர்தல் தொடர்பான நாடி பிடிக்கும் வேலையில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைமை எப்படி உள்ளது. யாருடைய கூட்டணியை காங்கிரஸார் விரும்புகிறார்கள். விஜயகாந்த்தின் அரசியல் எப்படி உள்ளது என்பது உள்பட காங்கிரஸாரே எதிர்பார்க்காத பல கேள்விகளைக் கேட்டு சூழ்நிலையை அனுமானித்து வருகிறாராம்.
சமீபத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்தபோது பல்வேறு கேள்விகளைக் கேட்டு தகவல்களை சேகரித்துள்ளார். அவர் கேட்ட பல கேள்விகளுக்கு இவர்களால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லையாம். காரணம், அவ்வளவு நுனுக்கமாக தமிழக நிலவரத்தை கையில் வைத்துள்ளாராம் ராகுல்.
இந்த நிலையில், முன்னணி தலைவர்களில் ஒருவரான சி.கே.பெருமாள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதி கே.பி.பூபதி ஆகியோரை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் ராகுல் காந்தி.
தமிழக அரசியல் சூழ்நிலை, கட்சி வளர்ச்சி, கட்சி தேர்தல், இளைஞர் காங்கிரஸ் ஆற்ற வேண்டிய பணிகள், தற்போது அரசியல் கட்சிகளின் பலம், பலவீனம், புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகளின் நிலை ஆகியவை மற்றும் மக்கள் மனநிலை ஆகியவை குறித்து அவர் ஆர்வத்துடன் கேட்டறிந்ததாராம் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் ஆலோசனைகளை வைத்துப் பார்க்கும்போது தேர்தல் தொடர்பான கூட்டணியை காங்கிரஸ் மறு பரிசீலனை செய்யவும் தயாராக உள்ளதாகவே தெரிகிறது.