அதிமுக கூட்டணியில் யார் யார்-மதுரையில் அறிவிக்கிறார் ஜெ.?
திமுகவை விட படு வேகமாக காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. கடந்த நான்கு ஆண்டு காலம் தூங்கிக் கொண்டிருந்த அவர் தற்போது படு சுறுசுறுப்பாக களத்தில் குதித்துள்ளார். திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் ஊர் ஊராக கூட்டம் போட்டு சரமாரியாக தாக்கி வருகிறார். மறுபக்கம் கூட்டணியையும் பலப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளோடு சில புதிய கட்சிகளையும் அதிமுக சேர்த்து வருகிறது. தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில், மதிமுக, சிபிஎம், சிபிஐ, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவை தவிர சில முக்கிய கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என அதிமுக திடமாக நம்புகிறது. இதுதொடர்பாக ரகசியப் பேச்சுக்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தனது திருச்சி கண்டனக் கூட்டத்தின்போது கூட்டணியை ஜெயலலிதா அறிவிப்பார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போது உள்ள கட்சிகளுக்குரிய சீட்கள் எத்தனை என்பது கிட்டத்தட்ட பேசி முடிவாகி விட்டது. எனவே திருச்சி கூட்டத்தில் கூட்டணியை அம்மா அறிவிக்கலாம் என்கின்றனர் அதிமுக வட்டாரத்தினர்.
ஒருவேளை இதில் தாமதம் ஏதாவது ஏற்பட்டால் மதுரையில் கூட்டணி குறித்து நிச்சயம் அறிவிப்பார் ஜெயலலிதா. கோவையில் நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். எனவே திருச்சி அல்லது மதுரையில் அது எந்தக் கூட்டணி என்பதை அவர் அறிவித்து தொண்டர்களுக்கு மேலும் குஷியேற்றுவார் என்கிறார்கள்.
அதிமுக கூட்டணிக்கு முக்கிய கட்சி ஒன்று வரப் போவதாக சில காலமாகவே பேச்சு நிலவி வருகிறது. தற்போது அந்தக் கட்சியுடன் கிட்டத்தட்ட உடன்பாடு காணப்பட்டு விட்டதாகவும், அதனால்தான் திருச்சி அல்லது மதுரை கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்க ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.