சாதிவாரி சென்ஸஸ்: இனி்ப்பு வழங்கி கொண்டாடிய பாமக
சென்னை: நாடு விடுதலைப் பெற்ற பிறகு முதன் முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்தை பாராட்டி வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது பாமகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு சலுகை நிறைவாகக் கிடைக்க உதவிடும் வகையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதற்காக கடந்த மக்களவையில் உறுப்பினர்களாக இருந்த 300க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து வாங்கி, அப்போது உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் உள்துறை அமைச்சரிடம் மனு அளித்தார்.
பாமகவின் தொடர் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த லாலு பிரசாத் யாதவ், முயலாம் சிங், சரத் யாதவ் உள்ளிட்ட சமூக நீதியில் அக்கறை கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
மக்களுக்கு இனிப்பு வழங்கிய பாமகவினர்:
இதற்கிடையே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தமிழகம முழுவதும் பாமகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
சென்னை தி.நகர் பஸ் நிலையம் முன்பு பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது மணி பேசுகையில்,
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆரம்பம் முதலே பாமக போராட்டம் நடத்தி வருகிறது. 300 எம்.பிக்களின் கையெழுத்து வாங்கி மத்திய அரசிடம் அன்புமணி வழங்கினார்.
இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை இனி சட்டமாக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு கிராம நிர்வாக அதிகாரி மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.
27% இட ஒதுக்கீடு-அமலாக்க கால நீட்டிப்பு கூடாது:
இந் நிலையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுவதுமாக அமல்படுத்த மேலும் மூன்று ஆண்டுகள் கால அவகாசத்துக்கு வழி செய்யும் மசோதாவுக்கு திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.
அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீத இடங்களை ஒதுக்கி, மூன்றாண்டுகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு எட்டப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதற்கு மாறாக, மேலும் 3 ஆண்டுகள் காலத்தை நீட்டிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு இக்கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள சமூக நீதியாளர்கள், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள், கட்சிகளைக் கடந்து இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்த்து முறியடிக்க வேண்டுமா என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.