நாளை மானாமதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: ஜெ அறிவிப்பு
சென்னை: குடிநீர் மற்றும் வீட்டு வரி ஆகியவற்றை குறைக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் மானாமதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். அவர்கள் கழிப்பறை, விளையாட்டு மைதானம், போதிய இடம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, அங்குள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தையும், பயணிகள் தங்கும் விடுதியையும் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அந்த இடத்தை பள்ளிக்கு அளித்தால் பேருதவியாக இருக்கும் என்று அ.தி.மு.க.சார்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இது குறித்து தி.மு.க. பாராமுகமாகவே உள்ளது.
மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே காவல் நிலையத்திற்கும், கிருஷ்ணராஜபுரம் தெருவிற்கும் இடையில் பாலம் கட்டுவதாக தி.மு.க. அரசு அறிவித்ததோடு சரி, இன்று வரை அதற்கான எந்த பணியும் துவங்கவில்லை. குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட மானாமதுரை இல்லை. வைகை ஆற்றின் இரண்டு கரை ஓரங்களிலும் தடுப்புச் சுவர் எழுப்பப்படாததால் கழிவு நீர் ஆற்றில் கலக்கின்றது.மேலும், மானாமதுரை தொகுதியில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இழப்பீட்டு பணம் வழங்கப்படவில்லை. இவ்வாறு அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
மானாமதுரை தொகுதியில் உள்ள திருபுவனம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் ஒன்றை அமைக்க விடுத்த கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை.
இங்குள் சமூகநல மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தித் தருமாறு பொதுமக்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து சட்டமன்றத்திலும் வலியுறுத்தப்பட்ட பின் தி.மு.க. அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வாக்குறுதி செயல் வடிவம் பெறவில்லை.
மேலும், மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் ஒன்றியத்தில், லாடனேந்தல் முதல் திருப்பாச்சேத்தி வரை செயல்பட்டு வரும் மணல் குவாரியை தி.மு.க. அரசு அகற்றாததால் அங்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. புதிதாக நில சர்வே எடுத்தும் ஆவணங்களை அளிக்காமல் பேரூராட்சி நிர்வாகம் மக்களை ஏமாற்றி வருகிறது. தாட்கோ மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்களில் மோசடி நடக்கிறது. இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இளையான்குடி பேரூராட்சி மற்றும் அதற்குட்பட்ட கிராமங்களுக்கு காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. சீரான மின்சார வசதியின்றி இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்ட பணிகளை முறையாக செயல்படுத்தாமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
எனவே, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.