தொழிலின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த உதவும் ஐஎஸ்ஓ
தற்போது தமிழகத்தில் நடைபெறும் வணிகத்திற்கு தரம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இதற்காக பல வணிக நிறுவனங்கள் நாடிச் செல்வது ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட்.
இந்த சர்டிபிகேட் இருந்தால் தான் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பதோடு, லாபத்தை பெற முடியும் என்ற நிலைக்கு வியாபார நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.
சரி, ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? இதனால் யாருக்கு லாபம்? என ஒசூரைச் சேர்ந்த அண்ணபூரணி எண்டர்பிரைசஸ் நிர்வாகி ரெங்கநாதனை அணுகி பேசினோம்.
ஐ.எஸ்.ஓ என்றால் என்ன?
ஐ.எஸ்.ஓ ( International Organization for Standardization) என்பது ஒரு சர்வதேச தரச் சான்றிதழ் ஆகும்.
ஐ.எஸ்.ஓ. 9001 2008 என்பதன் பொருள் என்ன?
ஐ.எஸ்.ஓ. 9001 என்பது தரத்திற்காக ஐ.எஸ்.ஓ. நிறுவனத்தால் தரப்படும் குறியீடாகும். 2008 என்பது அது மறுபரிசீலனை செய்த வருடமாகும்.
ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் யார் யார் எல்லாம் பெறலாம்?
ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை எந்தவிதமான தொழில் முனைவோரும் பெறலாம். இதை இவர்கள் தான் பெற வேண்டும் என்ற எந்தவிதமான விதிகளும் இல்லை.
ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதன் நோக்கம் என்ன?
ஒரு தொழிற்சாலையிலோ அல்லது தொழிற் முனைவோர் இடத்திலோ மருத்துவமனையிலோ ஏற்னவே உள்ள தரத்தினை மேம்படுத்துவதற்காக மற்றும் தொழில் வளத்தை பெருக்கவும், வியாபாரத்தை விரிவு படுத்தவும் இந்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்கள் பயன்படுகின்றன.
இதற்கு அரசு என்ன உதவி செய்கின்றது?
ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு எஸ்.எஸ்.ஐ. யூனிட்களுக்கு அரசாங்கம் நிதியுதவி அளிக்கின்றது. ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற பின்பு அதன் விவரங்களை அனுப்பினால், நாம் எவ்வளவு செலவு செய்தோமோ அதில் 75 சதவீத்தை அரசு மானியமாக வழங்குகின்றது. ஆகவே, சிறு தொழில் முனைவோர் ஐ.எஸ்.ஓ. 9001 2008 தரச் சான்றிதழ் பெறுவதில் எந்தவித தடையும் இல்லை.
ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?
ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகும்.
இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
1. உலகத்தர அங்கீகாரம் கிடைக்கின்றது.
2. தரத்தை உயர்த்தி வியாபாரத்தை பெருக்கலாம்.
3. பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
4. நமது உற்பத்தியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
5. வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முடியும்.
ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றால் வங்கிகளில் கடன் பெற முடியுமா?
நிச்சயமாக முடியும். சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை பெறுவதன் மூலம் அரசு வங்களிலும், அரசு அனுமதி பெற்ற வங்கிகளிலும் வியாபாரத்தை பெருக்க கடன் பெறலாம் என்றார் ரங்கநாதன்.