அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது
அவர் அமெரிக்காவில் ஹிந்துக்கள் நல அமைப்பில் உரை நிகழ்த்த வந்தவர் ஆவார்.
டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட விஜய குமாரிடம் எப்பிஐ அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
தீவிரவாதிகள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று ஆய்வு செய்தனர். ஆனால் அவரது பெயர் தீவிரவாதிகள் பட்டியலில் இல்லை.
இதையடுத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை தேவையில்லை என்று முடிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர் 5,000 அமெரிக்க டாலர்களை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து விஜய குமாரின் வழக்கறிஞர் கிராண்ட் செய்னர் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்கள் நல அமைப்பில் (Hindu Congress of America) இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் குறித்து உரையாற்ற விஜய குமார் வந்துள்ளார்.
மற்றபடி அவரது அமெரிக்கப் பயணத்தில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. அவருக்கும் எந்த தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை. அவரால் அமெரிக்கர்களுக்கும் அச்சுறுத்தல் இல்லை. அவர் ஜிகாதை ஊக்குவிக்கும் புத்தகங்களும், துப்பாக்கியும் வைத்திருந்தது உண்மைதான்.
ஆனால், தற்காப்புக்காகத் தான் அவர் துப்பாக்கி வைத்திருந்தார். இஸ்லாமிய ஜிகாத் குறித்து படித்து உரை நிகழ்த்தவே அவர் அந்த புத்தகத்தை வாங்கியுள்ளார்.
விமான நிலையத்துக்குள் இந்த புத்தகங்களையும் துப்பாக்கியையும் கொண்டு வந்தது குற்றம் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவர் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் ஏதும் பதிவாகவில்லை என்றார்.